சித்த மருத்துவ பீட விரிவுரையாளர் படுகொலை: யாழ். நீதவான் பிறப்பித்துள்ள உத்தரவு!
யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் தயாளனி திலீபனின் கொலை வழக்கு எதிர்வரும் 16ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அன்றைய தினம் வரையில், சந்தேகநபர்களான படுகொலையானவரின் மகளையும் மருமகனையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பிலான வழக்கு விசாரணை, யாழ். நீதவான் நீதிமன்றில் நேற்று(02) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மூத்த விரிவுரையாளர் கடந்த 18ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் 21ஆம் திகதி தனங்கிளப்பு பகுதியில் உள்ள பற்றைக்காட்டிற்குள் இருந்து சடலம் மீட்கப்பட்டது.
வழக்கு விசாரணை
சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகன் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், நேற்று(02.04.2026) வரையில் இருவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இதன்போது, நீதிமன்ற விசாரணைகளில் தலையீடு செய்வது போன்றும் , நீதிமன்றை அவமதிப்பது போன்றும் சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களில் தகவல்கள், செய்திகள் வெளியாகியமை தொடர்பில் சந்தேக நபர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் ஆதாரங்களுடன் தமது கடும் ஆட்சேபனைகளை மன்றில் முன் வைத்துள்ளனர்.
இதனையடுத்து, ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் செய்திகளை வெளியிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 16ஆம் திகதிக்கு திகதியிட்ட , மன்று அன்றைய தினம் வரையில் சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
