இலங்கை அணித் தலைவரின் எச்சரிக்கை : அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை
இலங்கை கிரிக்கெட் அணியைச் சுற்றி அதிகரித்து வரும் எதிர்மறை விமர்சன சூழ்நிலை குறித்து அரசாங்கம் தலையிட வேண்டும் என அணித்தலைவர் தசுன் சானக்க கோரியுள்ளார்.
இந்த நிலை வீரர்களின் மனநலத்தையும், நாட்டின் கிரிக்கெட் எதிர்காலத்தையும் பாதித்து வருவதாக அவர் எச்சரித்துள்ளார்.
இலங்கை அணி
டி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் அரையறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பினை இலங்கை அணி இழந்த நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தோல்விக்கான பொறுப்பை அணி ஏற்கிறது என்றாலும் வெளிப்புற விமர்சனங்களின் அலை தீங்கு விளைவிக்கும் சூழலை உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளார்.
“இந்த உலகக்கோப்பையை கருத்தில் கொள்ளும்போது, பெடி எப்டோன் Paddy Upton எங்களுடன் பணியாற்றினார். அவரிடமிருந்து பெரும் ஆதரவு கிடைத்தது.
ஆனால் வெளியில் இருந்து வரும் சத்தங்களை அல்லது விமர்சனங்களை கட்டுப்படுத்துவது வீரர்களாகிய எங்களுக்கு மிகவும் கடினம்,” என சனக தெரிவித்துள்ளார்.
விமர்சிக்கும் கலாசாரம்
அணிக்குள் நேர்மறையான சூழலை பேண முயன்றாலும், சமூக ஊடகங்கள் மற்றும் பொதுவெளியில் பரவி வரும் விமர்சனங்கள் வீரர்களை எப்போதும் தாக்கி வருகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நாங்கள் அதிகமாக கேட்பது எதிர்மறை விஷயங்களையே. வீரர்களாக நாங்கள் எவ்வளவு நேர்மறையாக இருந்தாலும், வெளியில் இருந்து ஒரு எதிர்மறை சூழல் உருவாக்கப்படுகிறது. அது இலங்கை கிரிக்கெட்டுக்கு பாதகமாகும் என தெரிவித்துள்ளார்.

பொதுவெளியில் அணியை குறிவைத்து விமர்சிக்கும் கலாசாரத்தையும் சானக கேள்வி எழுப்பியுள்ளார்.
“எங்களிடம் உள்ள ஒரே விளையாட்டு இதுதான். இதை காப்பாற்ற முடியாது போல தோன்றுகிறது. வெளியே சென்றால் எத்தனை பேர் ஒலிவாங்கி பிடித்து விமர்சிக்க காத்திருக்கிறார்கள் என்று பாருங்கள். ஏன் இவ்வளவு எதிர்மறை பரப்பப்படுகிறது?” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
உலகக்கோப்பை தோல்விக்கான காரணங்களை அணி நன்கு புரிந்துகொண்டுள்ளதாகவும், பொதுமக்களின் கரிசனைகளையும் கவனத்திற் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், கட்டமைப்பு சிக்கல்களை சரிசெய்வதற்குப் பதிலாக எதிர்மறை விமர்சனங்கள் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
சானக்க கோரிக்கை
“சரி, நாங்கள் ஒரு உலகக்கோப்பையை இழந்தோம்; காரணங்களை நாங்கள் அறிவோம். அனைவருக்கும் கவலைகள் உள்ளன. ஆனால் பிரச்சினைகளைத் தீர்க்கும் முயற்சிகளை விட எதிர்மறை பேச்சுகளே முன்னிலையில் வருகின்றன,” என கவலை வெளியிட்டுள்ளார்.
இளம் வீரர்களின் மனநலத்தை பாதுகாக்க அதிகாரிகள் தலையிட வேண்டும் என்றும் சானக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்த தலைமுறை வீரர்களுக்காவது, அரசாங்கம் தலையிட்டு இந்த எதிர்மறை சூழலை கட்டுப்படுத்தினால், அது அவர்களின் மனநலத்திற்கு பெரிய உதவியாக இருக்கும் என தசுன் சானக்க அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
இலங்கை அணியில் பல வீரர்கள் உபாதைகளுக்கு உள்ளானதாகவும் வீரர்களின் உடல் தகுதி தொடர்பில் கடும் கரிசனை செலுத்த வேண்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அணித் தேர்வின் போது வீரர்களின் உடல் தகுதி தொடர்பில் தெளிவான வழிகாட்டல்கள் பின்பற்றப்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளார்.