வன்புணர்வு குற்றச்சாட்டிற்கு உள்ளான இலங்கை கிரிக்கெட் வீரர்! சிட்னி நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவு
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வழக்கு தொடர்பான செய்திகளை அறிக்கையிடுவதற்கு ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.
தனுஷ்க குணதிலக்கவிற்கு எதிரான வன்புணர்வு வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போதே சிட்னி நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காணொளி தொழிநுட்பத்தினூடாக தனுஷ்க குணதிலக்க இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்ததாக தெரியவருகிறது.
இது தொடர்பான வழக்கு அடுத்த வருடம் ஜனவரி 12ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மேலும் பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள தனுஷ்க குணதிலக்க அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் வழக்கு இன்று (09.11.2022) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
ஆவணங்களில் உள்ள முரண்பாடு காரணமாக குறித்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
எனினும், வழக்கு விசாரணையை ஊடகங்களுக்கு வெளியிட வேண்டாம் என மனுதாரர் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை சிட்னி கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் சானக சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவரை வன்புணர்விற்கு உட்படுத்தியமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
தனுஷ்க குணதிலக்கவின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் குழு, குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என நீதிமன்றில் நிரூபிக்கும் திறன் தங்களுக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
வெளியாகியுள்ள தகவல்
இவ்வாறான சூழ்நிலையில் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வன்புணர்வு குற்றச்சாட்டை முடிவிற்கு கொண்டுவர 100,000 அவுஸ்திரேலிய டொலர்களை வழங்குமாறு முறைப்பாடு செய்த பெண் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் தனுஷ்க குணதிலக்க தரப்பு இணக்கம் தெரிவிக்காமையால் 25,000 அமெரிக்க டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
