நீண்ட கால சூழ்ச்சி! இலங்கையில் அமெரிக்க இராணுவ முகாம் அமைக்கும் ஆபத்து: கடுமையான எச்சரிக்கை
இலங்கைக்கு LNG விநியோகத்திற்கும் ஒப்பந்தத்தை அமெரிக்காவுக்கு வழங்கியமை நீண்டகாலம் மேற்கொண்ட சூழ்ச்சியின் ஆரம்பம் என லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகள் மற்றும் இலங்கைக்கு LNG விநியோகிக்கும் உரிமையை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கியமை தொடர்பாக ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கைக்கு LNG விநியோகிக்கும் ஒப்பந்தத்தை அமெரிக்காவுக்கு வழங்கியதன் மூலம் நாட்டின் பொருளாதார நிர்வாகம் முழுமையாக அமெரிக்காவின் கைகளுக்கு செல்லும். இது முற்றிலும் எம்.சி.சி உடன்படிக்கையில் கைச்சாத்திட்டமைக்கு ஈடானது. அத்துடன் இதன் மூலம் அமெரிக்க இராணுவ முகாம் ஒன்றை இலங்கையில் ஸ்தாபிக்க முடியும்.
இந்த நிலைமை அதிகரிக்க இடமளித்தால், இலங்கைக்கு எதிர்காலத்தில் இந்த ஆபத்து அதிகரிக்கும் எனவும் திஸ்ஸ விதாரண குறிப்பிட்டுள்ளார்.