எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்டுள்ள ஆபத்து! விடுக்கப்பட்டுள்ள எச்சரிச்கை
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பிடித்த கப்பலில் அடங்கியிருந்த இரசாயனங்கள் கடல் வாழ் உயிரினங்களுக்கு கடுமையான அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக இலங்கை கடல் சூழலியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடல் மாசடைவு பேரழிவின் ஐந்து சதவீதத்தை மாத்திரமே கடற்கரையில் காணக்கூடியதாக இருப்பதாக, இலங்கையின் கடல் சூழலைப் பாதுகாக்க செயற்படும், தன்னார்வ அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த அழிவின் 95% கடலிலேயே காணப்படுவதாகவும், கண்களால் நாம் பார்ப்பது ஐந்து சதவீதம் மாத்திரமே என கருதலாம் எனவும் பேர்ள் புரொடெக்டர்ஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முதிதா கட்டுவால தெரிவித்துள்ளார்.
குறித்த இரசாயனங்களை அகற்ற நீண்டகாலம் எடுக்கும் என்பதால், அழிவின் அளவும் பெரிதாகவே இருக்குமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
தீப்பிடித்து எரிந்த எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில், கொள்கலன்கள், பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் போத்தல்கள், பைகள் உள்ளிட்ட அடர்த்தியான பல வகையான பிளாஸ்டிக் பொருட்கள் கரை ஒதுங்கியுள்ளன.
சிங்கப்பூர் கொடியின் கீழ் பயணம் செய்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் எத்தனோல், 25 தொன் நைட்ரிக் அமிலம், இரசாயனப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள் அடங்கிய 1,486 கொள்கலன்கள் கப்பலில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்ணீரில் கலந்த பிளாஸ்டிக் துகள்கள் கடுமையான சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என முதிதா கட்டுவால தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், எண்ணெய் கசிவால் ஏற்படும் சேதத்தை குறைக்க இலங்கையில் எந்த வழிமுறையும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
”எண்ணெய் கசிவு ஏற்பட்டால், எரிபொருள் கடல் நீரின் மேற்பரப்பில் பரவும். இதனால் சூரிய ஒளி கடலுக்குள் நுழைவது தடுக்கப்படும். இது கடல் வாழ் உயிரினங்களையும் சுற்றுச்சூழல் அமைப்பையும் மோசமாக பாதிக்கும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பாதிப்பு, கொழும்பு துறைமுகம், துறைமுக நகரம் மற்றும் நீர்கொழும்பு மீன்பிடி துறைமுகம் ஆகியவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்ற அதேவேளை, இதனால் நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான இழப்பு ஏற்படக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
கடல் நீரால் அடித்து வரப்பட்டுள்ள பிளாஸ்டிக் துகள்களால் மீன் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்பட்ட சேதம் மிகப்பெரியது என முதிதா சுட்டிக்காட்டுகின்றார்.
கடலில் உள்ள இரசாயனங்கள் பிளாஸ்டிக் துகள்கள் உறிஞ்சப்படும் என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், மேலும் இதுபோன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களை உறிஞ்சும் துகள்கள் கடற்கரையில் மாத்திரமன்றி கடலிலும் காணப்படுகின்றன என்பதை வலியுறுத்தியுள்ளார்.
இதுபோன்ற துகள்களை மீன்கள் சாப்பிடுவது அவைகளின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் எனவும், இதனால் மீன்பிடித் தொழிலுக்கு ஏற்படக்கூடிய நெருக்கடி குறித்தும் அவர் எச்சரித்துள்ளார்.
சிறிய பிளாஸ்டிக் துண்டுகளைப் போலவே, இவை உணவுச் சங்கிலியில் நுழைந்து மக்களின் உணவுத் தட்டுகளையும் அவை வந்தடையும் அபாயம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தன்னார்வ அமைப்புகள் ஒன்றிணைந்து கடற்கரையை சுத்தம் செய்வதற்கான வாய்ப்பு நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்திற்கான தற்போதைய கட்டுப்பாடுகள் தடையாக அமைந்துள்ளதாக முதிதா கட்டுவால மேலும் தெரிவித்துள்ளார்.