கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒட்சிசன் நிரப்பும் இயந்திர பகுதிக்கு சேதம்: விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸார் (photos)
கிளிநொச்சியில் அடையாளம் தெரியாதவர்களால் ஒட்சிசன் நிரப்பும் இயந்திர பகுதிகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஒன்றரை இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நிதி பற்றாக்குறைகிளிநொச்சி வைத்தியசாலையில் உள்ள ஒட்சிசன் சிலிண்டர்களுக்கு ஒட்சிசன் நிரப்பும் இயந்திர பகுதியை செயலிழக்க செய்யும் நோக்குடன் கடந்த 15 ஆம் திகதி குறித்த இயந்திரத்துக்குள் இரும்பு துகள்கள் போடப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.
இதனால் தற்போது வைத்தியசாலை நிர்வாகம் தமக்குத் தேவையான ஒட்சிசன் சிலிண்டர்களை நிரப்ப முடியாத நிலையில் 99 சிலிண்டர்களை ஒட்சிசன் நிரப்புவதற்காக அனுராதபுரத்திற்கு அனுப்பிவைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் எரிபொருள் நெருக்கடி மற்றும் வைத்திய செலவுகளுக்கான நிதி பற்றாக்குறை ஆகியன காணப்படுகின்ற நிலையில் இவ்வாறு ஒட்சிசன் நிரப்புவதற்காக 99 சிலிண்டர்களும் அநுராதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பல மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வந்த இந்த இயந்திரப்பகுதியானது கடந்த 2012 ஆம் ஆண்டு தொடக்கம் 2017 ஆம் ஆண்டு வரை இயங்காத நிலையில் காணப்பட்டுள்ளது.
அக்கால பகுதியில் இருந்த பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் முயற்சியினால் குறித்த இயந்திரதொகுதி சீராக்கப்பட்டு சிலிண்டர்களுக்கான ஒட்சிசன் நிரப்பப்பட்டு வந்துள்ளது.
53 மில்லியன் செலவு
கடந்த 2018 ஆம் ஆண்டு இயந்திர தொகுதியை செயலிழக்க செய்யும் நோக்கில் இயந்திரத்தின் இயங்கு பகுதிக்குள் விசமிகளால் திட்டமிட்டு மணல் போடப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு உடனடியாக திருத்தி அமைக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் ஏற்பாட்டில் உடனடியாக குறித்த பகுதிகளில் கண்காணிப்பு கமராக்களை பொருத்தி அதற்கான காவலாளி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சுமார் 53 மில்லியன் ரூபாவுக்குவிற்கும் மேற்பட்ட நிதி செலவிடப்பட்டு இயந்திர தொகுதி சீரமைக்கப்பட்டுள்ளதுடன் ஒட்சிசன் நிரப்பும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையிலேயே திட்டமிட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி ஒளிப்பதிவுகளை வைத்தியசாலை நிர்வாகம் வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.