இலங்கை மக்களை ஏமாற்றும் அநுர அரசு! அமெரிக்க டொலரின் பெறுமதியில் நடக்கும் மோசடி அம்பலம்
இலங்கை சுங்கத் திணைக்களம் பயன்படுத்தும் அமெரிக்க டொலருக்கான மாற்று வீதம், இலங்கை மத்திய வங்கி மற்றும் வர்த்தக வங்கிகள் அறிவித்துள்ள தற்போதைய சந்தை நாணய மாற்று வீதத்தை விட அதிகமாக இருப்பதாக சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அவ்வமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கடந்த 25ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நடைபெறும் அனைத்து சுங்கப் பரிவர்த்தனைகளுக்கும் ஒரு அமெரிக்க டொலருக்கு 351.17 ரூபாய் என்ற நாணய மாற்று வீதம் பயன்படுத்தப்படும் என சுங்கத் திணைக்களம் வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளது.
நாணய மாற்று வீதம்
இந்த மாற்று வீதமானது வங்கித்துறையில் தற்போது நிலவும் சாதாரண மாற்று வீதத்தை விட கணிசமான அளவு அதிகமாகும்.

மத்திய வங்கிக்கு இடையிலான மாற்று வீதத் தலையீடுகள் மூலம் டொலரின் மதிப்பை குறைந்த மட்டத்தில் பேண மத்திய வங்கி முயற்சிக்கின்றது.
இதேவேளை, அரசாங்கத்திற்கு அதிக வருவாயை ஈட்டித் தரும் சுங்கத் திணைக்களம், இறக்குமதிகளுக்கு தொடர்ந்து அதிக மாற்று வீதத்தைப் பயன்படுத்தி வருவதாக சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு தங்கள் அறிக்கையில் குற்றம் சுமத்தியுள்ளது.
பொருட்களின் விலை
சுங்கத் திணைக்களத்தின் இந்த அதிகப்படியான மாற்று வீதம், இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகளில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும். இறுதியாக நுகர்வோரையே பாதிக்கும் என அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் சுங்கப் பரிவர்த்தனைகளுக்காகப் பயன்படுத்தப்படும் மாற்று வீதத்தை, தற்போது சந்தையில் நிலவும் சாதாரண மாற்று வீதத்திற்கு இணங்க உடனடியாக திருத்தியமைக்குமாறு மத்திய வங்கியிடம் சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பின் அழைப்பாளர், ஜனாதிபதி சட்டத்தரணி மைத்ரி குணரத்ன மற்றும் அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி, ரஜித் கீர்த்தி தென்னகோன் ஆகியோரால் இந்த அறிக்கை கூட்டாக வெளியிடப்பட்டுள்ளது.