யாழிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குவிந்த மக்கள் (Photos)
யாழிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெருமளவான மக்கள் நீண்ட வரிசையில் நின்று எரிபொருளை பெற்று கொள்கின்றனர்.
சித்தன்கேணி
சித்தன்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குவிந்துள்ளனர். இதனால் வீதி போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
பின்னர் வட்டுக்கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி சமன் குணதிலகவின் வழிகாட்டலின் கீழ் கடமையில் ஈடுபடுத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் போக்குவரத்தினை ஓரளவு சீர்செய்தனர்.
கடந்த சில தினங்களாக எரிபொருள் இல்லாமல் இருந்தமையால் மக்கள் இவ்வாறு குவிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மந்திகை
வடமராட்சி - மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோலை பெற்றுக் கொள்வதற்காக முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவற்றுடன், மக்கள் மிக மிக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
கடந்த மூன்று தினங்களாக எரிபொருள் இல்லாத நிலையில் இன்றையதினம் எரிபொருள் வந்திறங்கி விநியோகிக்கப்பட்டுக் கொண்டிருந்த சற்று நேரத்தில் மின்சாரம் தடைப்பட்டதால் மக்கள் வரிசையில் காத்திருந்தனர்.
தொடர்ந்தும் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக 300க்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டிகளுடனும் ஆயிரத்துக்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களுடனும் மக்கள் எரிபொருள் நிரப்புவதற்குக் காத்திருக்கின்றனர்.
ஆனால் மொத்தமாக 6 ஆயிரத்து 600 லிட்டர் பெட்ரோல் மட்டுமே எரிபொருள் நிலையம் நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.