காகம் விரைவில் வரவுள்ளதாக தகவல்-நிரோஷன் பெரேரா
வரவு செலவுத்திட்டத்தை வெற்றியடைய செய்ய “காகம்” விரைவில் மீண்டும் இலங்கை வரவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத்திட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பல அரசியல்வாதிகளின் எண்ணம் கொள்ளையடிப்பது
அவர் வந்து என்ன செய்ய போகிறார் என்பதை நாங்கள் பார்ப்போம். ஜனாதிபதியை கட்டிப்போட்டு விட்டு அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் அல்லது பணத்தை கொள்ளையிட வேண்டும் என்பதை நாட்டின் அரசியல்வாதிகளில் பலரது எண்ணமாக இருக்கின்றது எனவும் நிரோஷன் பெரேரா தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சரும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ச இலங்கை திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் இலங்கை வரவுள்ளமை குறித்தே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா காகம் இலங்கை வரவுள்ளதாக தகவல் எனக்கூறியுள்ளார்.
காகம் என கூறுவது கீழ்த்தரமான செயல்
இந்த நிலையில், நிரோஷன பெரேராவின் கருத்துக்கு பதிலளித்து உரையாற்றிய ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க,ஒருவரை காகம் என கூறுவது மோசமான கீழ்த்தரமான செயல் என தெரிவித்துள்ளார்.
காகம் என பேசும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஒரு காலத்தில் காகத்திற்கு பின்னர் சென்றவர்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தந்தையர் உட்பட உறவினர்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்தனர். அவர்கள் தமது பொறுப்பை நிறைவேற்றி இருந்தால், நாட்டுக்கு தற்போதைய நிலைமை ஏற்பட்டிருக்காது எனவும் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.