"கனடாவில் இருந்து யாழ் வந்தவருக்கு புலனாய்வாளர்களால் ஏற்பட்ட நெருக்கடி"
அண்மையில் கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் ஒருவரை இராணுவப் புலனாய்வாளர்கள் அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் இலங்கை நாடாளுமன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இது குறித்து நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“இலங்கையில் மனித உரிமைகள் மிக மோசமான நிலையில் இருக்கின்றது. நீண்ட காலமாக மனித உரிமைகளை நிலைநாட்ட முடியாமல் இலங்கை அரசாங்கம் இருந்து வருகின்றது.
அண்மையில் கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த தனது நண்பர் ஒருவரை இராணுவப் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தியுள்ளனர். அவரை பின் தொடர்ந்த புலனாய்வாளர்கள் ஏன் இலங்கை வந்தீர்கள்? எதற்காக வந்தீர்கள்? என்றவாறு விசாரணை செய்துள்ளனர்.
அத்துடன், நீங்கள் எங்களது அலுவலகத்திற்கு வரவேண்டும் என தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்துள்ளதுடன், அச்சுறுத்தலும் விடுத்துள்ளனர். இது குறித்து அந்த நண்பர் என்னை தொடர்புகொண்டு முறையிட்டிருந்தார்.
“சாவகச்சேரி பிரதேசத்தில் இருக்கின்ற கச்சாய் இராணுவ முகாமிற்கு உரித்தான இராணுவப் புலனாய்வாளர்கள் தன்னை தொடர்ச்சியாக மிரட்டுவதாக அந்த நண்பர் என்னிடம் குறிப்பிட்டார். நான் இலங்கையிலிருந்து போகவா? என்னால் இங்கு இருக்க முடியாதா? என்று அவர் என்னிடம் கேட்டார்.
இதனையடுத்து யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இது குறித்து முறைப்பாடு செய்யுமாறு நான் அந்த நண்பரிடம் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.