ட்ரம்பின் வரியால் இலங்கைக்கு காத்திருக்கும் பாரிய நெருக்கடி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய பரஸ்பர வரி இலங்கைக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகள் உள்ளிட்ட பொருட்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய வரிக் கொள்கையை வரும் ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்த அமெரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
வரி வருமானம்
அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வரி வருமானம் இடைவெளியை இரு நாடுகளுக்கும் இணையான முறையில் குறைப்பதே புதிய வரியின் நோக்கம் என்று கூறப்படுகிறது.
தற்போது தெரிவிக்கப்பட்டுள்ள தகவலுக்கமைய, அமெரிக்கா இலங்கையிடமிருந்து ஆண்டுதோறும் 3 பில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்கின்றது.
அதே நேரத்தில் இலங்கை அமெரிக்காவிடமிருந்து ஆண்டுதோறும் 600 மில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்கின்றது.
இராஜதந்திர வட்டாரங்கள்
இந்த சூழ்நிலையில், அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் இலங்கை பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டு, வருடாந்த வர்த்தக பற்றாக்குறையான 2 பில்லியன் டொலர்களை ஈடுசெய்யும் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது இலங்கையை மட்டும் பாதிக்கும் வரி அல்ல எனவும் ட்ரம்ப் நிர்வாகத்தால் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளுக்கு இது செயல்படுத்தப்படுகிறது எனவும் கூறப்படுகிறது.
எந்தவொரு பொருட்கள் அல்லது சேவைகளுக்கும் விதிக்கப்படும் வற் வரியை ஒரு கட்டணமாக கருத டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
