எரிபொருள் பற்றாக்குறை குறித்து கருத்து கூறியமைக்காக குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்ட இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க (ஜே.எஸ்.எஸ்) செயலாளர் ஆனந்த பாலித இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவரை 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனி அபேவிக்ரம அனுமதித்துள்ளார்.
பெற்றோலிய கூட்டுத்தாபனம் அளித்த முறைப்பாட்டை அடுத்து வத்தளையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து பாலித நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.
தற்போதைய நிலையில் நாட்டில் டீசல் கையிருப்பு 11 நாட்களுக்கும், பெற்றோல் கையிருப்பானது 10 நாட்களுக்கும் மாத்திரமே போதுமானது என்று அவர் வெளியிட்ட தகவல் தொடர்பில் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே பாலித கைது செய்யப்பட்டிருந்தார்.
அத்துடன், அவரது அறிக்கை பொய்யானது என்றும், இதுபோன்ற அறிக்கைகளால் பொது மக்கள் பீதியடைவார்கள் என்றும் கூறி இலங்கை பெற்றோலியக் கூட்டுதாபனம் முறைப்பாட்டை செய்திருந்ததாக தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.