நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற உழவர் திருநாளான மாட்டுப் பொங்கல்! (Video)
தைத்திருநாளை அடுத்துவரும் பட்டிப்பொங்கல் நிகழ்வுகளை இன்று கால்நடை பண்ணையாளர்கள் கொண்டாடிவருகின்றனர்.
பட்டிப்பொங்கலானது தைத்திருநாள் தினத்தை அடுத்துவரும் நாளில் வெகுவிமர்சையாக தமிழர்களால் குறிப்பாக விவசாயிகளால் கொண்டாடப்படுகிறது.
விவசாயச் செய்கைக்கு பலநிலைகளில் பெரும் ஆதரவு நல்கும் மாடுகளை கௌரவிக்கும் முகமாகவும் நன்றி செலுத்தும் முகமாகவும் அவைகளைக் கடவுள் போல எண்ணி இப் பட்டிப்பொங்கலானது கொண்டாடப்படுகிறது.
மட்டக்களப்பு
ஈழத்து திருச்செந்தூர் என போற்றப்படும் மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் உள்ள மாட்டு பட்டியில் இன்று காலை பட்டிப்பொங்கல் விழா சிறப்பாக இடம்பெற்றது.
மக்களின் வாழ்வில் ஒன்றர கலந்த பசுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாக இது கருதப்படுகிறது.
இவ்வாலயத்திலுள்ள மாட்டுப்பட்டியில் பொங்கல் பொங்கப்பட்டு பசுக்களுக்கு பூஜைகள் நடைபெற்றன.
குலம் காக்கும் பசுவை காப்போம் எனும் தொனிப்பொருளில் பட்டிப்பொங்கல் விழா சிறப்பாக நடாத்தப்பட்டது.
செய்திகள் : குமார்
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் - சந்திரத்து ஞான வைரவர் ஆலயத்தில் கோபூசை இடம்பெற்று பின்னர் கோபவணி, மற்றும் கோமாதா கீர்த்தனங்கள் என்பன முறையே இடம்பெற்றது.
கோபவணியானது ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி காங்கேசன்துறை வீதி ஊடாக மின்சார நிலைய வீதி, யாழ் பேருந்து நிலைய மேற்கு வீதி மற்றும் ஆஸ்பத்திரி வீதி ஊடாக ஆலயத்தை வந்தடைந்தது.
குறித்த கோமாதா உற்சவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், சமய குருமார்கள், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், மற்றும் அடியார்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தி- கோகுலன்