இயற்கை உரப்பாவனை கால்நடைகள் வெட்டப்படுவது காரணமாக குறைவடைவதற்கான வாய்ப்புள்ளது : மா.இளம்பிறையன்
இலங்கை அரசாங்கத்தினால் தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்ற இயற்கை உரப்பாவனை என்பது கால்நடைகள் வெட்டப்படுவது காரணமாக குறைவடைவதற்கான வாய்ப்புள்ளது என தீவக சிவில் சமூக அமைப்பின் செயலாளர் மா.இளம்பிறையன் தெரிவித்துள்ளார்.
மாடுகள் களவாடப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்படுவது தொடர்பாக யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
தீவகத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கால்நடைகளின் எருக்களை உரங்களாக மாற்றி அவற்றின் மூலம் தமது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இலங்கை அரசாங்கத்தினால் தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்ற இயற்கை உரப்பாவனை என்பது கால்நடைகள் வெட்டப்படுவது காரணமாக குறைவடைவதற்கான வாய்ப்புள்ளது.
இது விவசாயிகளுக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். சர்வ சாதாரணமாக தீவகப் பகுதியில் ஒவ்வொரு நாளும் மாடுகள் இறைச்சிக்காக திருடப்பட்டு வெட்டப்பட்டு மண்டைதீவு காவலரணையும் தாண்டி யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளுக்கும் விற்பனைக்கு செல்கிறது. தீவகப் பகுதிகளில் தொடர்ச்சியாக வளர்ப்பு மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
இன்று நான்கு மாடுகள் களவாடப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளன. இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் ஏற்படாதவாறு சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
தீவகப்பகுதிகளில் மர்ம நபர்களால் களவாடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள மாடுகள் (Photos)



