கோவிட், டெல்டா வரிசையில் புதிய வைரஸ்! விளைவுகள் அதிகம்
கோவிட் வைரஸ் தொற்று காரணமாக கடந்து ஆண்டு உலகமே ஸ்தம்பித்தது. பெரும்பாலான நாடுகள் நாடு தழுவிய ஊரடங்கை அமுல்படுத்தின. பெரும்பாலான மக்கள் வீட்டிற்குள்ளே முடங்கினர்.
அரசுகள் எடுத்த கடுமையான நடவடிக்கைகள் காரணமாக வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்து, உலகம் மெதுவாக சகஜ நிலைக்கு திரும்ப ஆரம்பித்தது.
இந்த நிலையில்தான் வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ளதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.
தென்ஆப்பிரிக்காவில் உருமாறிய கோவிட் வைரஸ் கண்டறியப்பட்டது. பின்னர் ஒவ்வொரு நாட்டிலும் வைரஸ் உருமாற்றம் அடைய ஆரம்பித்தது.
இதற்கிடையே கோவிட் தடுப்பூசியும் கடந்த ஆண்டு இறுதியில் இருந்து நடைமுறைக்கு வரத்தொடங்கியது. ஆனால் சில தடுப்பூசியின் செயல்திறன்கள் உருமாற்றம் அடைந்த வைரஸ்களுக்கு எதிராக குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் உருமாற்றம் அடைந்ததாக கூறப்படும் டெல்டா வைரஸ்தான் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் ஏராளமான நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இதுதான் உலகிற்கே அச்சுறுத்தல் என உலக சுகாதார மையமே எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் தற்போது லாம்ப்டா என்ற உருமாற்றம் அடைந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் அறியப்பட்டுள்ளது. இது டெல்டா வைரஸை விட அதிக விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாம். இந்த வைரஸ் பெரு நாட்டில் முதன்முதலாக கண்டறியப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகள் டெல்டா வைரஸ் தொற்றுக்கு எதிராக போரிட்டுக் கொண்டிருக்கும் நிலையில், லாம்ப்டா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது என இங்கிலாந்து சுகாதார மையம் தெரிவித்துள்ளது.