வவுனியாவில் 60 வயதிற்கு மேற்பட்ட 62 வீதமானவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது
வவுனியா மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 62 வீதமானவர்களுக்கும், 30 வயதிற்கும் 59 வயதிற்கும் இடைப்பட்ட 27 வீதமானவர்களுக்கும் இரண்டாவது டோஸ் கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் கோவிட் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதன் ஒரு கட்டமாக கோவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஒரு இலட்சத்து 81 ஆயிரம் தடுப்பூசிகள் வவுனியா மாவட்டத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளன. வவுனியா மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட 23,145 பேர் இருக்கின்றனர்.
அதில் முதலாவது டோஸ் தடுப்பூசி 87 வீதமானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான இரண்டாவது டோஸ் தடுப்பூசி 62 வீதமானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் 30 வயது தொடக்கம் 59 வயதிற்கு இடைப்படட 72,210 பேர் இருக்கிறார்கள். அதில் முதலாவது டோஸ் கோவிட் தடுப்பூசி 69 வீதமானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி தற்போது வழங்கப்பட்டு வருகின்றது. இதில் 27 வீதமானவர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.
மேலும், கிராம அலுவலர் ஊடாக தடுப்பூசி செலுத்தப்படும் விபரங்களைப் பெற்று உரிய இடங்களில் 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டு கோவிட் அச்சுறுத்தலில் இருந்து விடபட முன்வர வேண்டும் எனவும் சுகாதாரப் பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.