மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பகுதிகளிலும் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் பால்வெளி பகுதிகளிலும் குறித்த நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வவுணதீவு
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே முதலாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இரண்டாம் கட்டமாகவும் தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முதலாம் கட்டமாகத் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட அரச உத்தியோகத்தர்கள், சுகாதாரத் துறையினர், பாதுகாப்பு பிரிவினர், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என பல்வேறு தரப்பினருக்கு இந்த தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
வவுணதீவு பிரதேச செயலகத்தில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.அனட்ஜோதிலக்ஸ்மி தலைமையில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இங்கு தடுப்பூசி ஏற்றிக்கொள்வதற்காகப் பெருமளவானோர் ஆர்வத்துடன் வருகைதந்ததைக் காணமுடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
செய்தி - குமார்
காத்தான்குடி
காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டத்திற்கான சினோபாம் கோவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எல்.எம்.நபீல் தலைமையில் நடைபெற்று வருகின்றது.
இந்தவகையில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவிலுள்ள பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களுக்கு காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் கோவிட் -19 தடுப்பூசிகள் இன்று சனிக்கிழமை ஏற்றப்பட்டுள்ளது.
கோவிட் -19 தடுப்பூசி ஏற்றும் நிகழ்வில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எம்.எம்.பசீர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி - நடேசன்




