திருமலை மாவட்டத்தில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு
திருகோணமலை மாவட்டத்தில் இன்றைய தினம் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முதல் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இத் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தில் இன்று காலை முதல் இதுவரை மந்தகதியில் பொதுமக்கள் தடுப்பூசியினை பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நகரில் ஐந்து கோவிட் தடுப்பூசி செலுத்தும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள போதிலும் இவ்வாறு குறைந்த அளவிலான இளைஞர், யுவதிகளே இன்றைய தினம் தடுப்பூசியினை பெற்றுக்கொண்டுள்ளதாகத் திருகோணமலை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டில் கோவிட் தொற்றினை முற்றாக ஒழிப்பதற்கு அரசாங்கத்தினால் கட்டாயமாக்கப்பட்ட இவ் தடுப்பூசியினை இளைஞர், யுவதிகள் தவறாது பெற்றுக் கொள்ளுமாறும் இதுவரை இரண்டாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாதவர்களும் உடன் வந்து தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் ஆரம்பமான தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை இடம்பெறும் எனவும் அனைவரும் தடுப்பூசியைப் பெற்று கோவிட்டின் மரண பிடியிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறும் திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.