திருகோணமலையில் பொது சுகாதார பரிசோதகருக்கு கோவிட் தொற்று
திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பொது சுகாதார பரிசோதகருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
காய்ச்சல், அதிகளவிலான சளி காரணமாக குறித்த நபர் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த போதே தொற்று உறுதியாகியுள்ளது.
இவ்வாறு தொற்று உறுதியானவர் கிண்ணியா சுகாதார வைத்திய பணிமனையில் கடமை ஆற்றி வரும் 51 வயதுடைய பொது சுகாதார பரிசோதகர் எனவும் தெரிய வந்துள்ளது.
இலங்கைக்குள் குரங்கு அம்மை தொற்று பரவும் ஆபத்து - வைத்தியர் சந்திம ஜீவந்தர எச்சரிக்கை |
பி.சி.ஆர் பரிசோதனை
குறித்த பொது சுகாதார பரிசோதகருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் கடமை நேர வைத்திய பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தற்பொழுது கோவிட் தொற்று பரவிக் கொண்டு வருவதினால் முகக் கவசங்களை அணியுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் சமூக இடைவெளிகளை பேணி நடந்து கொள்ளுமாறும், கைகளை தொடர்ச்சியாக
கழுவுமாறும் திருகோணமலை பிராந்திய சுகாதார திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை
விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.