வவுனியாவில் மேலும் 94 பேருக்கு கோவிட் தொற்று உறுதி - இருவர் உயிரிழப்பு
வவுனியாவில் மேலும் 94 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று காலை வெளியாகியிருந்தன.
இந்த நிலையில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கோவிட் தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் மேலும் 94 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அடையாளம் காணப்பட்டுள்ள கோவிட் தொற்றுக்கு இலக்கான நோயாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும், கோவிட் தொற்று காரணமாக வவுனியாவில் நேற்றைய தினம் இருவர் மரணமடைந்துள்ளனர்.
அதன்படி சாந்தசோலை பகுதியில் பெண் ஒருவரும் (வயது 58), தவசிகுளம் பகுதியில் பெண் ஒருவரும் (வயது 35) என இருவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்களை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தகனம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.