மோசமடையும் கோவிட் தொற்று பரவல் - இலங்கையில் பொது சுகாதார அவசர நிலைமை
உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளதன் படி இலங்கையில் தற்போது சுகாதார அவசர நிலைமை நிலவுகிறதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக்குழு மற்றும் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் கோவிட் தொற்றாளர்கள் தொடர்பில் தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்படுகின்ற தரவுகள் முரண்பட்டவையாகவும் தெளிவற்றவையாகும் காணப்படுவதானது, கோவிட் கட்டுப்படுத்தல் செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு நாடளாவிய ரீதியில் காணப்படுகின்ற 122 கிளை சங்கங்கள் ஊடாக உண்மையாக தரவுகளை, சுகாதார அமைச்சிலும் பார்க்க விரைவாக சேகரிக்கக் கூடியதாக இருக்கும்.
இவ்வாறு சேகரிக்கப்படும் தரவுகளுக்கும் தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்படுகின்ற தரவுகளுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் நிலவுகின்றது. இலங்கையில் கோவிட் தொற்று பரவல் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளதன் படி இந்த தொற்று 'பொது சுகாதார அவசர நிலைமை' ஆகும். இதனை சரியான முறையில் முகாமைத்துவம் செய்ய வேண்டிய நிலைமையிலேயே நாம் உள்ளோம்.
அவ்வாறில்லை எனில் இது சகலருக்கும் பாரிய பிரச்சினையாக உருவாகும். ஒரு நாட்டில் இவ்வாறான நிலைமை ஏற்பட்டாலும் கூட அது ஏனைய நாடுகளுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தும்.
எனவே நாட்டில் நாளாந்தம் காணப்படுகின்ற உண்மையான கள நிலைவரத்தை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
அதே போன்று ஏனைய தரப்பினருக்கும் , அதாவது அரசியல்தரப்பினர், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு உண்மையான நிலைமை அறிவிக்கப்பட்டால் மாத்திரமே சரியான நடவடிக்கைகளை எடுக்க முடியும்.
எனவே தரவுகளை முகாமைத்துவம் செய்தல் மற்றும் சரியான தரவுகளை வழங்குதல் என்பது மிக முக்கியத்துவமுடையதாகும் என குறிப்பிட்டுள்ளார்.
