அம்பாறையில் தொழிற்சாலையொன்றில் கடமையாற்றி வந்த 188 பேருக்கு கோவிட் தொற்று உறுதி
கிழக்கில் அடுத்தகட்டமாக 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கும் பணிகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
அரசினால் இதுவரை வழங்கப்பட்ட தடுப்பூசிகளில் 202,511 தடுப்பூசிகள் கிழக்கு மாகாணத்தில் பரவலாக செலுத்தப்பட்டுள்ளன.
இன்று அல்லது நாளை திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கு தலா 100,000 தடுப்பூசிகளும் அதற்கு மேலதிகமாக கல்முனை பிராந்தியத்திற்கு 140,000 தடுப்பூசிகளும் கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இவை அனைத்தும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் பணி புரியும் முன்னிலை உத்தியோகத்தர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் பகிர்ந்தளிப்பதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
COVID - 19 3ஆவது அலையின் பின்னராக இதுவரை கிழக்கு மாகாணத்தில் 14,739க்கும் மேற்பட்ட தொற்றாளார்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன் 343 மரணங்களும் பதிவாகியுள்ளன.
கடந்த 24 மணித்தியாலத்தில் கல்முனைப் பிராந்திய சுகாதார பணிமனைக்கு உட்பட்ட பகுதியில் 33 நோயாளர்களும் ஒரு மரணமும் சம்பவித்துள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் தொழிற்சாலையொன்றில் கடமையாற்றி வந்த 188 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவில் 6368 கோவிட் தொற்றுக்கு இலக்கான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 89 மரணங்களும் இடம்பெற்றுள்ளதுடன், திருகோணமலை மாவட்டத்தில் 3924 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 144 மரணங்களும் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.