டெல்டாவை தொடர்ந்து டெல்டா பிளஸ் புதிய திரிபு தொடர்பில் எச்சரிக்கை - மிக வேகமாக பரவும் என தகவல்
இந்தியாவில் ஏற்கனவே கோவிட்டின் டெல்டா திரிபு ஆட்டம் காண வைத்துள்ள நிலையில் தற்போது டெல்டா பிளஸ் என்ற புதிய திரிபு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
டெல்டா பிளஸ் பாதிப்பு தொடர்பாக மகாராஷ்டிரா, கேரளா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கேவிட்டின் இரண்டாம் அலை தாக்கத்தில் டெல்டா திரிபு பெரும் பங்கை வகித்திருந்த நிலையில் டெல்டா பிளஸானது மூன்றாம் அலையை ஆரம்பிக்கும் அச்சம் எழுந்துள்ளதாக தெரியவருகிறது.
டெல்டா பிளஸ் திரிபானது, அதிகமாக பரவக்கூடியது என்பதுடன் நுரையீரல் செல்களின் ரிசப்டார்களுடன் (lung cell receptor) வலுவாக ஒட்டக் கூடிய தன்மை மற்றும் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் தன்மையை கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, கேரளா மற்றும் மத்தியப் பிரதேசத்தின் சில மாவட்டங்களில் கோவிட்டின் டெல்டா பிளஸ் வகை கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி மகாராஷ்டிராவின் ரத்னகிரி மற்றும் ஜல்கான் மாவட்டங்களிலும், கேரளாவின் பாலக்காடு மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களிலும், மத்தியப் பிரதேசத்தின் போபால் மற்றும் சிவபுரி மாவட்டங்களிலும் இந்த வகை கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து டெல்டா பிளஸ் கோவிட் பாதிப்பு உள்ள மாவட்டங்களில் உடனடி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.