கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்கள் கொழும்பில் அதிகளவில் பதிவாகியுள்ள பகுதிகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட பலர் கொழும்பு மாவட்டத்தின் மொரட்டுவை, புறக்கோட்டை மற்றும் பொரலஸ்கமுவ உள்ளிட்ட இடங்களில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று காலை 6 மணிக்கு முடிவடைந்த 24 மணிநேர காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தில் 529 பேர் கோவிட் வைரஸ் தொற்றுக்கு இலக்காகிய நிலையில் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்களில், பாதிக்கப்பட்ட 60 பேர் பிலியந்தலையை சேர்ந்தவர்கள், 54 பேர் மொரட்டுவயை சேர்ந்தவர்கள், 35 பேர் புறக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.
அத்துடன் ஏனையவர்கள் முல்லேரியா மற்றும் பொரலஸ்கமுவையை சேர்ந்தவர்கள்.
இலங்கையில் நேற்று மாத்திரம் 1923 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது இலங்கையில் ஒரு நாளில் கண்டறியப்பட்ட அதிக எண்ணிக்கையாகும்.
அவர்களில் ஒன்பது இலங்கையர்கள் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தவர்கள் மற்றும் ஒருவர் வெளிநாட்டவராவார்.
கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த 232 பேரும், களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 264 பேரும், காலி மாவட்டத்தைச் சேர்ந்த 154 பேரும், குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த 122 பேரும் நேற்று கண்டறியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.