கோவிட் தொற்றை காரணம் காட்டி முஸ்லிம்களுக்கு மட்டும் தடைகள் விதிக்கப்படுவது ஏன் - இம்ரான் கேள்வி
கோவிட் தொற்றை காரணம் காட்டி முஸ்லிம்களுக்கு மட்டும் தடைகள் விதிக்கப்படுவது ஏன் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் கேள்வி எழுப்பியுள்ளார்.
கிண்ணியாவில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்கள் இனவாத ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்படுவார்கள் என நாம் அன்றே எச்சரித்திருந்தோம். நாம் கூறிய படி தற்போது ஒவ்வொன்றாக நடந்து வருகிறது.
அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படும் சந்தர்ப்பங்களில் அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தை கையிலெடுத்தே அந்த அதிருப்தியை மறைக்கிறார்கள். உயிர்த்த ஞாயிறு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட சிங்கள அமைப்புக்கள் எதனையும் தடை செய்யாது முஸ்லிம் அமைப்புக்களை மாத்திரம் தடை செய்துள்ளனர்.
ரமழான் மாதத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சால் முஸ்லிம்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிவாயலில் நூறு பேருக்கு மேல் ஒன்று கூட முடியாது. நோன்பு கஞ்சி பகிர முடியாது என அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் புத்தாண்டை முன்னிட்டு மக்கள் கடை வீதிகளிலும் ,பொது இடங்களிலும் ஆயிரக்கணக்கான சமூக இடைவெளியின்றி ஒன்று கூடியதை நாம் கண்டோம்.
மதுபானசாலைகளில் பெரிய கூடடமே கூடி இருந்தது. ஆகவே புத்தாண்டில் தடைகளை விதிக்காத அரசு ஏன் ரமழான் மாதத்தில் முஸ்லிம்களுக்கு மாத்திரம் தடைகளை விதிக்க வேண்டும். ரமழான் கஞ்சி பகிர்வது எங்களுக்கு ஒன்றும் பர்ளு ஐன் இல்லை.
கோவிட் பரவலை கட்டுப்படுத்துவதை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் முஸ்லிம்களுக்கு மாத்திரம் தான் கோவிட் தொற்றுவது போன்று முஸ்லிம்களுக்கு மட்டும் தடைகள் விதிக்கப்படுவது ஏன் என்றே நாம் கேட்கிறோம். இதற்கு பின்னாலும் பெரிய இனவாத நிகழ்ச்சி நிரல் உள்ளது.
இந்த காலத்தில் இடம்பெறும் முஸ்லிம்களின் வியாபாரத்தை முடக்குவதே இந்த அரசின் நோக்கம். மே மாதத்தில் கோவிட் மற்றொரு அலை உருவாக்கலாம் என ராணுவ தளபதி ஏற்கனவே அறிவித்து விட்டார்.
ஆகவே மே மாதத்தில் இடம்பெறும் பெருநாள் வியாபாரத்தை முடக்க அரசு திடடமிட்டுள்ளதா என்ற சந்தேகம் இதனால் இப்போது எழுகிறது. தற்போது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி தடையால் முஸ்லிம் வியாபாரிகள் பலரே பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை மேலும் சிரமத்துக்கு உள்ளாக்கவே அரசு திட்டமிட்டு வருகிறது.
இவ்வாறு ஒவ்வொரு துறைகளிலும் முஸ்லிம்களை பழிவாங்கவே இந்த அரசு முயற்சிக்கிறது.ஆனால் காபட் வீதி மற்றும் பாலங்களில் இருந்து வரும்
கொமிஸன்களுக்காக சிலர் பசில் வந்தால் சரியாகும், நாமல் வந்தால் சரியாகும் என ஊருக்குள் கூறி திரிவது வேடிக்கையானது என்றும் தெரிவித்தார்.