திருகோணமலையில் நெடுஞ்சாலை வீதி போக்குவரத்து பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் மூவருக்கு கோவிட் தொற்று
திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் நெடுஞ்சாலை வீதி போக்குவரத்து பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் மூவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
காய்ச்சல்,இருமல் காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு நேற்றிரவு (09) சிகிச்சைக்காக சென்ற போது அங்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் கடமை வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
37,39 மற்றும் 49 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரையும் ஈச்சிலம்பற்று கோவிட் மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், வைத்தியசாலையில் கடமை நிறைவேற்று அதிகாரி குறிப்பிட்டார்.
இதேவேளை, திருகோணமலை - உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பாலையூற்று பூம்புகார் வீதியில் வசித்து வரும் 40 வயதுடைய ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு வருபவர்கள் தேவையற்ற விதத்தில் சிறுவர்களை வைத்தியசாலைக்கு அழைத்து வரவேண்டாம் எனவும், முகக்கவசங்களை தொடர்ச்சியாக அணியுமாறும்,சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறும் திருகோணமலை பொது வைத்தியசாலை நிர்வாகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.