திருமண நிகழ்வுகளால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள அபாய நிலை
நாட்டில் கோவிட் தொற்று தீவிரமாக பரவி வருகின்றது. இந் நிலை தொடருமானால் நீண்ட காலம் செல்வதற்கு முன்னர் சமூகத்தில் பயங்கரமானதொரு நிலை ஏற்படும் என அங்கொடை தொற்று நோய் நிறுவனத்தின் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
தற்போது அதிகமானவர்கள் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை மறந்து செயற்படுகின்றனர். விசேடமாக திருமண நிகழ்வுகள் உட்பட அதிகமான வைபவங்களுக்கு சுகாதார பிரிவினரால் வழங்கப்பட்டிருக்கும் பரிந்துரைகள் முறையாக பின்பற்றப்படுவதை காணக்கூடியதாக இல்லை.
திருமண நிகழ்வு உட்பட பல்வேறு வைபவங்களுக்கு அதிகமான மக்கள் கலந்துகொள்வது பிரச்சினைக்குரிய விடயமாகும்.
அத்துடன் இவ்வாறு வைபவ நிகழ்வுகளுக்கு அதிகமான எண்ணிக்கையிலானவர்கள் கலந்துகொள்வது, ஒமிக்ரோன் வகை வைரஸ் பரவி தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக இருக்கலாம்.
அதனால் மக்கள் நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு செயற்படவேண்டும் என்பதுடன் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த கொவிட் தடுப்பூசியின் 3 ஆவது டோஸையும் விரைவாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.