இராணுவ வெற்றிவாதம் தோண்டும் கோவிட் புதைகுழிகள்
கோவிட் தொற்று நோயினது தாக்கத்தின் வீரியத்தாலும், வேகத்தாலும் உலகம் முடங்கிப் போய்க் கிடக்கிறது. உலகளாவிய நாடுகளில் மருத்துவர்களும், மருத்துவ விஞ்ஞானிகளும் இந்த நோயின் தாக்கத்திலிருந்து உலக மக்களைப் பாதுகாப்பது எப்படி என தங்கள் மூளையைக் கசக்கிப் பிழிந்து விடைதேடிக் கொண்டிருக்கிறார்கள். கோவிட் வைரசின் தாக்கத்திலிருந்து மனித குலத்தை பாதுகாப்பதற்காக அறிவுசார் உலகம் ஒருபுறம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
ஆனால் இலங்கையில் புலிகளைத் தோற்கடித்த எமக்கு வைரஸ் ஒரு பொருட்டல்ல என கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிடுவது அறிவியலுக்கும், அவர் தகுதிக்கும், மூளைக்கும் தொடர்பற்றதாக காணப்படுகிறது. இத்தகைய மார்பு தட்டலின் விளைவை தற்போது இலங்கை மக்கள் அனுபவிக்கத் தொடங்கிவிட்டனர் என கட்டுரையாளர் திபாகரன் தனது கட்டுரையில் குறிப்பிட்டள்ளார்.
அவர் அக்கட்டுரையில் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டை ஒருமாத காலத்திற்கு முடக்கத்திற்குக் கொண்டு வந்தால் குறைந்தது பத்தாயிரம் பேரின் உயிரிழப்புக்களையாவது தவிர்க்கலாம் எனச் சிங்கள அறிஞர் ஒருவர் அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தார். அதனைப் பொருட்படுத்தாமல் நாட்டை அரசு திறந்து வைத்திருந்தது. இதனால் தொற்று நோயின் தாக்கம் வேகமாக அதிகரிக்கவும் தொடங்கியது. இருப்பினும் ஆட்சியாளர் அதனைக் கவனத்திற் கொள்ளாது இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியைச் சமன் செய்ய உல்லாசப் பயணிகளை உள்ளே அனுமதித்தனர். மக்களைத் திரளவும் அனுமதித்தனர்.
அதன் விளைவு நோய்த்தாக்கம் பல மடங்கு வேகமாக பரவிவிட்டது. மருத்துவ அறிவுசார் குழாத்தின் அறிவுறுத்தலையும் தொடர்ந்து அரசு உதாசீனப்படுத்தி வந்தது. ஆனால் இரண்டு மகாநாயக்க தேரர்கள் வேண்டுகோள் விடுத்த மறுகணமே இராணுவ நடவடிக்கையிலான பாணியில் நாளை முதல் நாடு முடக்கத்துக்கு வருகிறது என அறிவித்தது. இந்த அறிவிப்பின் விளைவால் கடந்த வெள்ளிக்கிழமை நாடெங்கிலும் மக்கள் சந்தைகளிலும் அங்காடிகளிலும் பெருவாரியாகக் குவியத் தொடங்கினர்.
தமக்குத் தேவையான உணவுப்பொருட்களைச் சேமிப்பதற்கு மக்கள் அங்கலாய்த்து முண்டியடித்து தெருவுக்கு வந்தனர். இந்த மக்கள் நெரிசல் கோவிட் தொற்றுதலின் வீதத்தைப் பன்மடங்காக அதிகரித்து விட்டது. இன்றைய இலங்கையின் அரசாங்கம் என்பது இனப்படுகொலையின் மீது கட்டமைக்கப்பட்ட ஒரு அரசாங்கமாகும். அது அனைத்தையும் இராணுவ கண்ணோட்டத்திலும், கொள்கையிலும், இராணுவ பாணியிலுமே செயலாற்ற முனைகிறது. இனப்படுகொலை மூலம் பெற்ற வெற்றியை வீரத்தினாலும், அறிவியல் ரீதியாகவும் பெற்ற வெற்றியாக எண்ணுகிறது.
ஒரு போருக்கான படை நடவடிக்கையையும் தொற்றுநோய்க்கு எதிரான நடவடிக்கையையும் ஒன்றாக எண்ணுவது அறிவியல் வறுமையின் வெளிப்பாடாகும். போர் நடவடிக்கை என்பது வீரத்திலும் தந்திரத்தில் தங்கியுள்ளது. ஆனால் வைரஸ் தொற்றுக்கு எதிரான நடவடிக்கை என்பது முற்றிலும் அறிவுசார் செயற்பாடாகும். இலங்கை இராணுவம் யுத்தத்தில் வெற்றி பெற்றமை என்பது வீரத்தினால் பெற்ற வெற்றி அல்ல. அது இலங்கை தீவின் ஒரு பகுதி மக்களை இனப்படுகொலை செய்து தொடர் படை நடவடிக்கைகளின் மூலம் மக்களை இடம்பெயரச் செய்தது.
மக்களின் இடப்பெயர்வின் மூலம் புலிகளை பெரும் சுமையைத் தாங்க வைத்து மக்களை ஒரு பிரதேசத்துக்குள் வகைதொகையின்றி கொன்று குவித்ததன் மூலம் பெறப்பட்ட இனப்படுகொலையிலான வெற்றியே இலங்கை இராணுவம் கூறும் யுத்த வெற்றியாகும். இனப்படுகொலை வாயிலான அந்த யுத்த வெற்றியினால் சிங்கள மக்கள் மத்தியில் பெறப்பட்ட இராணுவத்திற்கான அங்கீகாரத்தையும் மதிப்பையும் இன்றைய அரசாங்கம் தொடர்ந்து தக்கவைக்க முயல்கிறது.
இதன் மூலம் மேற்படி யுத்த வெற்றியின் ஆட்சியாளர் தொடர்ந்து தமது ஆட்சியைத் தக்க வைக்கலாம் என்பதன் அடிப்படையிலேயே இன்று தொற்றுநோய்க்கு எதிரான நடவடிக்கையிலும் இந்த இராணுவத்தைப் பயன்படுத்த முனைகின்றனர்.
ஆனால் ஒன்றரை வருடத்துக்கு மேலாக உலகம் எதிர் நோக்கியிருக்கும் தொற்று நோயின் தாக்கத்திலிருந்து விடுபட முடியாமல் உள்ளது. இராணுவ நடவடிக்கையால் பெற்ற மேற்படி பொய்யான வெற்றிக்கும் தொற்றுநோய்க்கு எதிரான நடவடிக்கைக்கும் இடையிலான வித்தியாசத்தை தற்போது இலங்கை மக்கள் உணரத் தொடங்கி இருக்கிறார்கள்.
பொதுவாக மக்கள் நலன் காப்பு பணிகளான வீதிப் புனரமைப்பு, பாலம் கட்டுதல், துறைமுகத்தில் சரக்கு ஏற்றியிறக்கல் போன்ற அவசரத் தேவைகளுக்காக இராணுவத்தினர் பயன்படுத்தப்படுவதும் வழக்கமாக உண்டு. அவ்வாறே அவசரகாலத் தேவைக்காக அதாவது இயற்கை இடர்களான புயல், வெள்ள, புவி நடுக்கம், சுனாமி மற்றும் யுத்த அழிவு போன்றவற்றிற்கான நிவாரணப் பணிகளுக்காக இராணுவத்தைப் பயன்படுத்தப்படுவது உலக அளவில் பொதுவான வழக்கமாக உள்ளது.
ஆனால் மருத்துவம், சுகாதாரம் போன்ற அறிவுசார் விடயங்களுக்கு இராணுவத்தைப் பயன்படுத்தும் வழக்கம் இன்றளவும் இலங்கையைத் தவிர வேறெங்கும் உலகில் இல்லை. மருத்துவம், சுகாதாரம் என்பவை அதிகம் அறிவு சார்ந்தும், புத்தி சாதுரியம் சார்ந்தும், மனித உயிர் சார்ந்ததுமான ஒரு பணியாகும். எனவே இங்கு கல்வியும், தொழில்சார் அறிவும் முதன்மை பெறுகின்றன. கல்விப்புலத்தில் பல்வேறு துறை சார்ந்தும் கற்கின்ற போது அதிக கல்வித்தகைமை உடையவர்களை மருத்துவத்துறையில் கற்க அனுமதிக்கப்படுவதுடன் அத்துறையே ஏனைய துறைகளைவிட நீண்டகால படிப்பைக் கொண்டதுமாகும்.
இவ்வாறு அறிவுசார்ந்த நீண்ட கற்றலின் பிற்பாடுதான் மருத்துவ சேவைக்கு அவர்கள் இணைக்கப்படுகிறார்கள். இலங்கையில் எட்டாம் வகுப்பு கற்றிருந்தால் இராணுவத்தில் இணைய முடியும். இத்தகைய அதி குறைந்த கல்வித்தகைமை உடைய இராணுவத்தினரை சதா மனித உயிரோடும், வாழ்வோடும் சம்பந்தப்பட்ட மருத்துவ சுகாதார சேவையில் பணியாற்றுவது மிகமிக ஆபத்தானது.
இவ்வாறு குறைந்த கல்வித் தகைமை உடைய இராணுவத்தினரைக் கொடிய தொற்றுநோய் வைரசுக்கு எதிரான மருத்துவ சேவையில் இலங்கை அரசு பயன்படுத்துகிறது. கோவிட் தொற்றுநோயைக் கட்டுப்படுத்தி விட்டோம் என்று இராணுவத் தளபதிகளின் வாயிலாக மார்தட்டிக் கொண்டு ஊடக அறிக்கைகளையும் வெளியிட்டது. இராணுவத்தினரை மேன்மைப்படுத்தும் இத்தகைய பிரச்சாரங்கள் அனைத்தையும் கிழித்தெறிந்து கொண்டு தற்போது இலங்கையில் கோவிட் வைரசினால் மக்கள் உயிரிழப்புக்கள் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.
அண்மையில் அவிசாவளை மருத்துவமனையில் ஈக்களைப் போல மக்கள் விழுந்து மடிகிறார்கள். வரும் நாட்களில் தெருக்களிலும் இவ்வாறு மக்கள் வகைதொகையின்றி விழுந்து மடிவார்கள் என ஒரு சிங்கள மருத்துவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டமையை கருத்திற்கொள்ள வேண்டும்.
ஆனால் அந்த மருத்துவர் மீது அரசு பொலிஸ் நடவடிக்கை எடுத்தது என்பது அது இன்னொரு பக்கம் அடாவடித்தனம். யுத்த காலத்தில் வன்னி மீது பால்மா, குளுக்கோஸ், மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட மிகக் கடுமையான பொருளாதாரத் தடை விடுக்கப்பட்டிருந்தது. அக்காலத்தில் வன்னிப் பெரு நிலப்பரப்பில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் மலேரியா, சிக்குன்குனியா, செப்டிசீமியா ஆகிய ஆட்கொல்லி நோய்கள் பரவி மக்கள் வீதிகளில் மரணிக்கும் நிலை ஏற்பட்டது.
இத்தகைய ஒரு அபாயகரமான சூழல் தோன்றியபோது விடுதலைப்புலிகள் அறிவுசார் முடிவை எடுத்தனர். அரசாங்க மருத்துவர்கள், தனியார் மருத்துவர்கள், போராளி மருத்துவர்கள் என மூன்று அணியினரையும் ஒருங்கிணைத்தனர். வன்னிப்பெரு நிலப்பரப்பில் இருந்த அனைத்து சுகாதார மருத்துவ வளங்களையும் ஒன்றிணைத்து மருத்துவத்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் ஒருங்கிணைந்த முகாமைத்துவத்தின் கீழ் இந்நோய் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
இதனால்தான் இலங்கையில் முதன் முதலில் மலேரியா, சிக்குன்குனியா, செப்டிசீமியா ஆகிய மூன்று நோய்களும் முற்றாகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட பிரதேசமாக வன்னிப் பிரதேசம் காணப்பட்டது.
ஆனால் அதே நேரம் இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்த வவுனியா நகரப்பகுதி, மதவாச்சி, அனுராதபுரம் போன்ற பகுதிகளில் இந்த நோயின் தாக்கம் தலைவிரித்தாடியது என்பதை அன்றைய கால பதிவுகள் நமக்குத் தெளிவாகக் காட்டுகிறன. இதிலிருந்து புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சிறந்த மருத்துவ முன்னுதாரணம் இலங்கைத் தீவில் பதிவாகியுள்ளது.
எனவே இனப்படுகொலையின் வாயிலாகப் பெறப்பட்ட இராணுவ வெற்றியை வைத்துக்கொண்டு முற்றிலும் அறிவு சார்ந்து செயற்படவேண்டிய புற்றுநோய்க்கு எதிரான நடவடிக்கைக்கு இராணுவத்தினரைப் பயன்படுத்துவது என்பது எவ்வளவு பெரிய அடி முட்டாள் தனமானது தெரிகிறது.
மக்கள் உயிரோடு சம்பந்தப்பட்ட தொற்று நோய்க்கு எதிராக இராணுவத்தைப் பயன்படுத்தி மக்களைத் தொடர்ந்து பலி கொடுத்துக் கொண்டிருக்கும் இலங்கை அரசை இலங்கையின் அறிவுசார் சமூகம் எவ்வளவு காலத்துக்குத்தான் பொறுத்துக்கொள்ளும்?.
இராணுவத்தை மகிமைப் படுத்துவதற்காகச் சிங்கள மக்களைத் தொடர்ந்து பலியிடுவதைச் சிங்கள சமூகம் எவ்வளவு காலத்துக்குத்தான் பொறுத்துக்கொள்ளும்?. இனவாதமும் இனப்படுகொலையும் தமிழர் தரப்பினர் மீது மேற்கொள்ளப்படுகின்ற போது பார்வையாளராக இருந்த சிங்கள சமூகம் அதே இராணுவத்தின் செயல்களால் தாம் மரணிக்கின்ற போது எவ்வாறுதான் பொறுத்துக்கொள்ள முடியும்?
எல்லாவற்றிற்குமான ஒரு எல்லைக்கோடு
ஒன்று உண்டு. அதனை இலங்கை இராணுவ
வெற்றிவாத ஆட்சியாளரும் சிங்களப் பொது
மக்களும் உணரும் காலம் வெகு
தொலைவிலில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.