வவுனியாவில் ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் உட்பட 8 பேருக்கு கோவிட்
வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுபவர்கள் உட்பட 8 பேருக்கு இன்று இரவு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் சிலர் கடந்த சில நாட்களாக கோவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதையடுத்து அவர்களுடன் தொடர்புடையவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று இரவு வெளியாகிய நிலையில் 7 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றுபவருக்கும் பி.சீ.ஆர். பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி வவுனியாவில் இன்று 8 பேர் கோவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வவுனியா கண்டி வீதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்த 14 பேர் இதுவரை கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.