வவுனியாவில் மேலும் 69 பேருக்கு கோவிட் தொற்று உறுதி - 4 பேர் உயிரிழப்பு
வவுனியாவில் மேலும் 69 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதுடன், 4 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று காலை வெளியாகியுள்ளன.
அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கோவிட் தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 69 பேருக்கு மேலும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்றுக்கு இலக்கானவர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களைத் தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும், கோவிட் தொற்று காரணமாக வவுனியாவில் நேற்றைய தினம் 5 பேர் மரணமடைந்துள்ளனர்.
நெடுங்கேணி பகுதியில் ஆண் ஒருவரும் (வயது 39), பட்டக்காடு பகுதியில் ஆண் ஒருவரும் (வயது 49), பம்பைமடு காப்பகம் ஒன்றில் ஆண் ஒருவரும் (வயது 79), உக்குளாங்குளம் பகுதியில் பெண் ஒருவரும் (வயது 71) என 4 பேர் மரணமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்களைச் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்வதற்குரிய நடவடிக்கைகளைச் சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.