ஓட்டமாவடியில் அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் - 19 தடுப்பூசி
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கோவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் நடைபெற்று வருகின்றது.
இந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் ஓட்டமாவடி 2ம் வட்டாரம் மற்றும் ஓட்டமாவடி 3ம் வட்டார பிரிவிலுள்ள அறுபது வயதிற்கு மேற்பட்ட பொது மக்கள் மற்றும் ஓட்டமாவடி சூடுபத்தினசேனையில் கோவிட்டினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் மையவாடியில் கடமையாற்றும் இராணுவத்தினர் ஆகியோருக்கு ஒட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் கோவிட் -19 தடுப்பூசிகள் இன்று ஏற்றப்பட்டன.
இதில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.நௌபர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த தடுப்பூசி தொடர்பில் ஏதும் சந்தேகங்கள் இருப்பின்
தடுப்பூசி நிலையத்தில் உள்ள வைத்தியரை அல்லது பொதுச் சுகாதார பரிசோதகரை அணுகி இது
தொடர்பான விளக்கங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என ஓட்டமாவடி சுகாதார வைத்திய
அதிகாரி வைத்தியர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு 25,000 தடுப்பு ஊசிகள் முதல் கட்டமாகக் கிடைக்கப் பெற்றுள்ளன.
இந்த நிலையில் பதினான்கு சுகாதார வைத்திய
அதிகாரி அலுவலகங்கள் ஊடாக தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்ட
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரனின் வழிகாட்டலில்
நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.