கோவில் திருவிழாவில் பங்கேற்ற கோவில் தலைவர் உட்பட 100 பேருக்கு கோவிட்
மட்டக்களப்பு - களுவங்கேணி மாரியமன் கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட கோவில் தலைவர், செயலாளர், குருக்கள் உட்பட 100 பேருக்கு கோவிட் தொற்று இன்று(05) உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த கிராம சேவகர் பிரிவான வந்தாறுமூலை கிழக்கு கிராம சேவகர் பிரிவை முடக்கித் தனிமைப்படுத்தத் தேசிய கோவிட் செயலணிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக செங்கலடி பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் சிவசேகரன் சிவகாந்தன் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
செங்கல பிரதேச சுகாதார அதிகாரி பிரிவிலுள்ள குறித்த ஆலய உற்சவம் நடாத்துவது தொடர்பாகச் சுகாதாரத் துறையிடம் அனுமதியைக் கோரியபோது 15 பேருடன் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி உற்சவத்தை நடாத்த அனுமதியளிக்கப்பட்டது.
இந்த நிலையில் குறித்த அனுமதியை மீறி ஆலய நிர்வாகம் கடைசிநாள் உற்சவத்தில் பெரும் திரளான மக்கள் பங்கேற்க ஆலய நிர்வாகம் அனுமதியளித்ததையடுத்து அங்கு பெரும் திரளான மக்கள் உற்சவத்தில் பங்கு கொண்டுள்ளனர்.
இதனையடுத்து குறித்த ஆலய நிர்வாகத்தை எச்சரித்ததுடன் ஆலயத்துக்குச் சென்ற அந்த வந்தாறுமூலை கிழக்கு கிராம சேவகர் பிரிவிலுள்ளவர்களுக்கு கடந்த 3 தினங்களாகத் தொடர்ந்து அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனை மேற் கொண்டதில் ஆலய தலைவர் செயலாளர் ஆலய குருக்கள் அவரது குடும்பம் உட்பட 100 பேருக்குத் தொற்று உறுதி இன்று வரை கண்டறியப்பட்டதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளை இந்த கிராம சேவகர் பிரிவைத் தனிமைப்படுத்தி முடக்கத் தேசிய கோவிட் செயலணிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.