மரண தண்டனை பெற்று 8 வருடங்கள் சிறையில் இருந்தவரை விடுவித்த நீதிமன்றம்
போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒருவரை மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று(10.11.2025) விடுதலை செய்துள்ளது.
இந்த வழக்கில் சோதனை மற்றும் பொருட்களை மீட்டெடுப்பது போன்ற விடயங்களில், உண்மை நிரூபிக்கப்படவில்லை என்று கண்டறிந்த நிலையிலேயே மேன்முறையீட்டு நீதிமன்றம், குற்றம் சுமத்தப்பட்டவரை விடுதலை செய்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவரை விடுவிக்க
இதன்போது 2017 மார்ச் 20 ஆம் திகதியன்று இந்த வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை நீதியரசர்கள் ரத்துச்செய்தனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது ஹெரோயினின் நிறை தொடர்பான முரண்பாடுகளையும் மேன்முறையீட்டு நீதிமன்றம் கவனித்துள்ளது.
முதல் பொலிஸ் சாட்சி 7 கிராம் ஹெரோயினை பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டதாக சாட்சியமளித்தபோது, அரச பகுப்பாய்வாளர் 7.44 கிராமை தாம் பெற்றதாக தெரிவித்துள்ளார்.
இது 0.44 கிராம் வேறுபாட்டைக் குறிக்கிறது என்பதை நீதிமன்றம் தமது கவனத்தில் எடுத்துக்கொண்டது.
அதன்படி மேன்முறையீட்டு நீதிமன்றம், மரண தண்டனையை ரத்து செய்து, குற்றம் சாட்டப்பட்டவரை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |