யாழில் உயிரிழந்த சிசு! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
யாழ்.பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பின்மை காரணமாக சிசுவொன்று உயிரிழந்ததாக அறிக்கையிடப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணையை (17.04.2023) ஆம் திகதியன்று மேற்கொள்ள பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அன்றைய தினம், பருத்தித்துறை திடீர் மரண விசாரணை அதிகாரி மன்றில் முன்னிலையாகி சாட்சியமளிக்கவுள்ளார்.
பருத்தித்துறை ஆதார மருத்துவமனை
புலோலி வடக்கு - கூவில் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், பிரசவத்துக்காக பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
குறித்த பெண்ணுக்கு ஊசி, மருந்துகள் ஏற்றப்பட்டுள்ளன. பின்னர், சிசு இறந்து பிறந்ததாக அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் நடத்தப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனையில், தாயாருக்கு ஊசி செலுத்தப்பட்டதன் பின், உரிய முறையில் மருத்துவ கண்காணிப்பு இன்மையால் கருப்பை வெடித்து, சிசுவுக்கு குருதி கடத்தப்படுவது தடைப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.
மேலதிக விசாரணை
இதனை தொடர்ந்து மேலதிக விசாரணைக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி கோரியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண், பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதுடன் அப்பெண்ணின் உறவினர்களால் முறைப்பாடும் செய்யப்பட்டிருந்தது.
இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் பொலிஸார் நீதிமன்றத்தில் அறிக்கையிட்டுள்ளனர்.
இதற்கமைய இந்த முறைப்பாடு தொடர்பிலான விசாரணையை 17 ஆம் திகதி பருத்தித்துறை நீதிமன்றில் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.



