அதிகாரப் பகிர்வினை வழங்கினால் நாடு மீண்டும் பிரிவினைவாதத்தை நோக்கிச் செல்லும் - ஞானசார தேரர்
அதிகாரப் பகிர்வினை வழங்கினால் நாடு மீண்டும் பிரிவினைவாதத்தை நோக்கிச் செல்லும் என ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொடத்தே ஞானசார தேரர் (Galagoda Aththe Gnanasara) தெரிவித்துள்ளார்.
அரசியல் சாசனத்தின் 13ம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் அதிகாரத்தை பகிருமாறு சிறுபான்மை கட்சிகள் கோரிக்கை விடுத்த போதிலும் அவ்வாறு செய்தால் நாட்டில் மீண்டும் பிரிவிணைவாதம் உருவாகும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனவே அதிகாரப் பகிர்வினை கோரும் சிறுபான்மை கட்சிகள் உள்ளிட்ட தரப்புக்களுக்கு முதலில் புனர்வாழ்வு அளிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டம் மற்றும் 13ம் திருத்தச் சட்டத்திற்கு அப்பால் என்ற கோரிக்கைகள் விடுக்கப்படக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
சிங்கள பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.




