இலங்கை ஒரு சிவபூமி! வெடுக்குநாறி மலையில் இடம்பெற்றது அழிவிற்கான ஆரம்பம்: அறங்காவலர் ஆதங்கம்
ஆதிலிங்கம் அழிக்கப்பட்டமை நாட்டின் அழிவிற்கான ஆரம்பம் என வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் அறங்காவலர் பூபாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
இன்று (02.04.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
பணி செய்த மூவர் கைது
எமது ஆலயம் இடித்தழிக்கபட்டதை தொடர்ந்து, இன்று (02.04.2023) அதிகாலை விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
எனினும் நேற்று (01.04.2023) மாலை குறித்த பணிகளை செய்த மூவர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
இன்று (02.04.2023) அமைச்சர்களின் பிரசன்னத்துடன் விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்படும் என எமக்கு தெரிவித்திருந்தனர்.
ஆனால் அது நடைபெறவில்லை. அது எமக்கு மிகுந்த கவலையளிக்கின்றது.
தொல்பொருட் திணைக்களம்
2018 ஆம் ஆண்டு தொல்பொருட் திணைக்களம் தலையிடும் வரை இந்த ஆலயத்தில் பொதுமக்கள் சுதந்திரமாக தமது வழிபாடுகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்த ஆலய வளாகம் அரச வர்த்தமானியில் பிரகடனப்படுத்தாத ஒரு இடமாகவே இருக்கின்றது.
எனினும் இந்து ஆலயங்களை அழிப்பதற்காகவே தொல்பொருட் திணைக்களம் உருவாக்கப்பட்டுள்ளதாக நாங்கள் கருதவேண்டியுள்ளது.
குருந்தூர்மலை
குருந்தூர் மலையில் நீதிமன்ற தீர்ப்பை மீறி விகாரை கட்டப்படுகின்றது. அதை எந்த சட்டமும் தண்டிக்கவில்லை.
ஆனால் ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்குள் செல்லவேண்டாம் என்று நீதிமன்றம் எமக்கு இதுவரை உத்தரவு போடவில்லை. தொல்லியல் திணைக்களமும் பொலிஸாருமே அதற்கு தடை ஏற்படுத்துகின்றனர்.
எம்மை உள்ளே விடமால் செய்துவிட்டு தற்போது யார் உடைத்தது என்று எங்களை பார்த்து அவர்கள் கேட்கின்றனர்.
மதவெறி பிடித்தவர்களால் எமது இந்து ஆலயங்கள் சீண்டப்படுகின்றன. நாம் ஏமாற்றம் அடைந்துள்ளோம்.
எனவே இந்த நாட்டில் நல்லிணக்கம்
ஏற்ப்படுத்துவதற்கான வாய்ப்பே இல்லை என்று நாம் கருதுகின்றோம். இலங்கை ஒரு
சிவபூமி எனவே இந்த செயற்பாடு ஒரு அழிவிற்கான அத்திவாரமாகவே இருக்கும் என தெரிவித்துள்ளார்.