ஜயவர்த்தனபுர அரச மருத்துவமனையில் ஊழல் : ஆணையகத்தின் அதிர்ச்சி வெளிப்படுத்தல்
2022 ஆம் ஆண்டு அரச மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகளில் பயன்படுத்தப்பட்ட நுஏனு என பெயரிடப்பட்ட மருத்துவப் பொருளுக்கு, நோயாளிகள் 120,000 முதல் 250,000 ரூபாய் வரை செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டதாக,இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையகம் குற்றம் சுமத்தியுள்ளது.
எனினும் அந்த மருந்து, குறித்த காலப்பகுதியில் 17,500 ரூபாய்க்கு, அதிகாரப்பூர்வமாக கொள்முதல் செய்யப்பட்டு அரச மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது என்றும் ஆணையகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்களின் பேரில், ஸ்ரீ ஜயவர்த்தனபுர பொது மருத்துவமனையின், ஒரு சிறப்பு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் ஒரு எழுதுவினைஞர் மற்றும் சிறப்பு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணருக்குச் சொந்தமான ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த மூன்றாவது நபர் ஆகியோர், மூன்றாம் தரப்பினர் மூலம் அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் லஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஆணையகம் தெரிவித்துள்ளது.
நிதி இழப்பு
மருத்துவமனை,தமது அதிகாரப்பூர்வ விநியோகப் பிரிவு மூலம் இந்தப் பொருட்களை வழங்கக்கூடிய திறனைக் கொண்டிருந்தாலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் நோயாளிகளை வெளிப்புற தனியார் தரப்பினரிடமிருந்து அவற்றை வாங்கும்படி தவறாக வழிநடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால் நோயாளிகளுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர்களுக்கும் தொடர்புடைய வெளிப்புற விநியோகஸ்தர்களுக்கு, அதிக இலாபம் கிடைத்ததாகவும் ஆணையகம் தெரிவித்துள்ளது.
விசாரணை
ஆணையகத்தின் கூற்றுப்படி, கைது செய்யப்பட்ட சிறப்பு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், மருத்துவமனை பொருட்களை புறக்கணித்து, வெளிப்புற விற்பனையாளர்களிடமிருந்து இந்த பொருட்களைப் பெற நோயாளிகளை வழிநடத்துவதன் மூலம் தனது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்துள்ளார்.
இது ஒரு கடுமையான ஊழல் செயலாகும். இந்த நிலையில் குறித்த பொருட்களைப் பயன்படுத்தி சுமார் 300 நோயாளிகள் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. அவர்களில் 77 பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நோயாளிகளில் பலர் பின்னர் இறந்து விட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதேநேரம் இந்த ஊழல் செயற்பாடுகளால், பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஏற்பட்ட நிதி இழப்பு சுமார் 300 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளதாக, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையகம் குற்றம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

போர் தொடர்பில் அப்படியே பலிக்கும் பாபா வங்காவின் கணிப்பு - ஈரான் இஸ்ரேல் போரில் வெற்றி யாருக்கு? News Lankasri
