கொரோனா தொற்று விரைவாக ஒழிக்கப்பட வேண்டும்:மன்னார் மறைமாவட்ட ஆயர்
கொரோனா தொற்று விரைவாக ஒழிக்கப்பட வேண்டும். மக்கள் தொற்றில் இருந்து விரைவாக விடுபட வேண்டும் என நத்தார் காலத்திலே இறைவனை வேண்டுவோம் என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.
மன்னார் மறைமாவட்டத்தின் நத்தார் திருவிழா தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
இவ்வருடம் நத்தார் திருவிழாவை நாங்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும்.எமக்கு மகிழ்ச்சியை கொண்டு வரும் யேசுநாதர் பிறப்பு விழாவை நாங்கள் கொண்டாடுகின்றோம்.
இவ்வருடம் கொவிட் கொள்ளை நோய் காரணமாக பலர் துன்பப்படுகின்றனர். தொழில் இல்லாத பிரச்சினை, உணவை பெற்றுக்கொள்ளுவதற்கும் எத்தனையோ தடைகள்.கட்டுப்பாட்டுக்குள் உள்ள மக்கள் பல்வேறு விதமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆகையினால் நாங்கள் அவர்களையும் நினைத்து இவ்வருடம் வெளி ஆடம்பரங்களை குறைத்து நத்தாரை கொண்டாடுவோம். மன்னார் மறை மாவட்டத்திலே நள்ளிரவு திருப்பலிகளை நிறைவேற்ற வேண்டாம் என்று நான் கேட்டுக்கொண்டுள்ளேன்.
நாள் திருப்பலிகள் வெவ்வேறு நேரங்களில் குறிப்பிட்ட தொகை மக்களை மாத்திரம் ஆலயங்களினுள் எடுத்து திருப்பலியை நடாத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளேன்.
துன்பப்படுகின்றவர்களை நினைத்து அவர்களுக்கு எங்களினால் இயன்ற உதவிகளையும் வழங்குமாறு கேட்டு நிற்கின்றேன்.மக்கள் அனைவருக்கும் இனிய நத்தார் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.
கொரோனா தொற்று விரைவாக ஒழிக்கப்பட வேண்டும். மக்கள் தொற்றில் இருந்து விரைவாக விடுபட வேண்டும் என நத்தார் காலத்திலே இறைவனை வேண்டுவோம்.இறை ஆசியை பெற்றுக்கொள்வோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.