கோவிட் தொற்றுடன் இலங்கையில் இருந்து ஐரோப்பிய நாடொன்றிற்கு சென்ற ஐவர்!
வவுனியா, தவசிகுளம் பகுதியில் இருந்து பிரான்ஸ் செல்வதற்காக மேற்கொண்ட பிசீஆர் பரிசோதனையில் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தொற்றாளர்கள் பிசீஆர் முடிவு வருவதற்கு முன்னரே பிரான்ஸ் சென்றுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, தவசிகுளம் பகுதியில் திருமணம் ஒன்றிக்காக பிரான்ஸில் இருந்து 6 பேர் வருகை தந்திருந்தனர். அவர்கள் மீளவும் வெளிநாடு செல்வதற்காக யாழ்ப்பாணம் ஆசிரியர் கல்லூரியில் பிசீஆர் பரிசோதனையை முன்னெடுத்திருந்தனர்.
அவர்களது பிசீஆர் முடிவுகள் நேற்று இரவு (19.09) வெளியாகிய நிலையில் குறித்த 6 பேரில் 5 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சுகாதாரப் பிரிவினர் குறித்த 5 பேரையும் தனிமைப்படுத்த சென்ற போது அவர்கள் பிரான்ஸ் சென்று விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிசீஆர் முடிவு வருவதற்கு முன்னர் குறித்த 6 பேரும் வீட்டில் இருந்து வெளியேறி பிரான்ஸ் சென்றுள்ளதாகவும், அதில் 5 பேர் கோவிட் தொற்றுடனேயே வவுனியாவில் இருந்து சென்றுள்ளதாகவும் சுகாதரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், குறித்த நபர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கு சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், குறித்த தொற்றாளர்கள் தொற்றுடன் எவ்வாறு வெளிநாடு சென்றார்கள் என்பது குறித்தும் சுகாதாரப் பிரிவினர் கவனம் செலுத்தியுள்ளனர்.