இந்தியாவை விட கோவிட் மரணங்கள் இலங்கையில் - காவிந்த ஜயவர்தன
பொறுப்பற்ற வகையில் நடந்துக்கொண்டு நாட்டுக்குள் கோவிட் பரவலை ஏற்படுத்தியவர்களை கண்டுபிடிப்பதற்காக 2024 ஆம் ஆண்டின் பின்னர், ஆட்சிக்கு வரும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
கோவிட் மரண வீதத்தை எடுத்துக்கொண்டால் மக்கள் தொகைக்கு இணையாக இந்தியாவை விட இலங்கையில் கோவிட் மரணங்கள் அதிகம்.
கடந்த வாரம் ஒரு மில்லியனுக்கு ஏற்பட்ட கோவிட் மரணங்கள் இலங்கையில் 2.39 வீதம்.
இந்தியாவில் இந்த எண்ணிக்கை 2.38 வீதம். இலங்கை மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது, இந்தியாவை விட இலங்கையில் கோவிட் மரணங்கள் அதிகரித்துள்ளன.
அதேபோல் பிரித்தானியாவில் ஒரு மில்லியனுக்கு 0.13 வீத கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. நியூசிலாந்தில் கோவிட் மரணங்கள் 0.00 என்ற வீதத்தில் பதிவாகியுள்ளன.
ஒரு மாதத்தில் அடையாளம் காணப்பட்ட கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கையில் இலங்கை உச்ச இடத்திற்கு வந்துள்ளது.
ஏற்பட்டுள்ள இந்த நிலைமை குறித்து நாடு என்ற வகையில் நாம் கவலையடைய வேண்டும். அத்துடன் கோவிட் தொடர்பான சரியான புள்ளிவிபரங்கள் வெளியிடப்படுகிறதா என்ற சந்தேகம் காணப்படுகிறது. அதேவேளை பயணக் கட்டுப்பாடுகள் வார்த்தைகளில் மாத்திரமே நடைமுறைப்படுத்தப்படுகிறது.
வீதிக்கு சென்று பார்த்தால் பயணக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் விதத்தை அறிந்துக்கொள்ள முடியும்.
இறுதியில் இந்த ஏமாற்று நடவடிக்கைகளுக்கு நாட்டு மக்களே இழப்பீடுகளை செலுத்த வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் காவிந்த ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.