கடுவெல நீதிவானின் பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்ட விவகாரம்! பொலிஸ் அலுவலர் பணியில் இருந்து இடைநீக்கம்!
கடுவெல நீதவான் சனிமா விஜேபண்டாரவின் இல்லத்திற்கு பாதுகாப்பு வழங்கத் தவறியமைக்காக பொலிஸ் அலுவலர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடுவெல நீதவானின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே ஊடகங்களும் சில அமைப்புகளும் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்திருந்தன.
இதனையடுத்து, இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்திருந்தார்.
இந்தநிலையில், நடத்தப்பட்ட விசாரணையில் நீதிவானின் வீட்டில் காவலில் இருந்த பொலிஸ் அலுவலரே தமது கடமையை உதாசீனம் செய்து பணியில் இருந்து வெளியேறியமை தெரியவந்துள்ளது.
விசாரணையின்படி, மே 5 ஆம் திகதி நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக நீதிவான் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், குறித்த பொலிஸ் அலுவலரும் உயரதிகாரிகளுக்கு அறிவிக்காமல் அங்கிருந்து வெளியேறிள்ளார்.
மே 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்திற்கு அருகாமையில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதைத் தடுக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட பொலிஸாரின் கோரிக்கையை மே 04 ஆம் திகதி கடுவெல நீதவான் நிராகரித்திருந்தார்.
அத்துடன் நாடாளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 13 பேரையும் அன்றைய தினம் சொந்த பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிடிருந்தார்.
இதனை மையப்படுத்தியே அவரின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
vனினும் நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளின் பாதுகாப்பை நீக்குவது அல்லது குறைப்பது தொடர்பாக பொலிஸ் தலைமையகம் எந்த அறிவுறுத்தலும் வழங்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.