அமைச்சரிடம் தலைக்கவசம் கேட்ட சமையல்காரர்!
எரிவாயு வெடிப்பினால் பலர் அச்சமடைந்துள்ளதாகவும், தனது வீட்டில் சமைத்துக்கொண்டிருந்த நபரும் பாதுகாப்பு தலைக்கவசத்தை கேட்டுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
சுற்றாடல் அமைச்சில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எதிர்காலத்தில் அரசாங்கம் கவிழுமா என்பது பிரதான கட்சியில் உள்ளவர்களின் நடத்தையை பொறுத்தே தீர்மானிக்கப்படும் எனவும், ஏனைய கட்சிகளை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதனை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள உரப்பிரச்சினை, சீன உரக் கப்பலுக்கு பணம் செலுத்த வேண்டிய தேவை, இறக்குமதியில் மோசடிகள், ஊழல்கள் இடம்பெற்றுள்ளனவா என்பன தொடர்பில் ஆராய முழுமையான ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் முன்மொழிவதாகவும் அமைச்சர் கூறினார்.
இது தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், வல்லுநர்கள் அடங்கிய முழு அளவிலான ஆணையத்தை நியமிக்க வேண்டும் என்றும் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.
மீண்டும் தரமான உரம் வழங்கும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் உரக்கப்பலுக்கான கட்டணம் செலுத்தப்படும் எனவும், இல்லையெனில் பொறுப்பானவர்களிடம் இருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் விவசாய அமைச்சர் அமைச்சரவையில் தெரிவித்தார்.
இதேவேளை, எரிவாயு வெடிப்பினால் பலர் அச்சமடைந்துள்ளதாகவும், தனது வீட்டில் சமைத்துக்கொண்டிருந்த நபரும் பாதுகாப்பு தலைக்கவசத்தை கேட்டுள்ளதாகவும் அமைச்சர் அமரவீர மேலும் தெரிவித்தார்.