டிக்கோயா வைத்தியசாலையில் சர்ச்சை: மகளின் சடலம் குறித்து தாய் முறைப்பாடு- விசாரணை தீவிரம்
ஹட்டன் – டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் யுவதியின் சடலத்தை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில், மூன்று மருத்துவமனை ஊழியர்கள் நான்கு முறை பிணவறைக்குச் சென்றது சிசிடிவி காட்சிகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான மஞ்சுள சுரவீர ஆராச்சி தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் இருந்த இறந்த இளம் பெண்ணின் சடலத்தை மூன்று மருத்துவமனை ஊழியர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முறையான விசாரணை நடத்தக் கோரி, இறந்த இளம் பெண்ணின் தாயார் நேற்று (06.03.2026) நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளரைச் சந்திக்கச் சென்றபோது, மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கேமரா காட்சிகள் அவருக்குக் காண்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அப்போது, ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் மட்டுமே மூன்று மருத்துவமனை ஊழியர்கள் பிணவறைக்குச் சென்று, குறுகிய நேரத்திலேயே வெளியேறும் காட்சிகள் மட்டுமே காண்பிக்கப்பட்டதாகவும், அந்த நேரத்தில் பிரேத அறையில் யுவதியின் சடலத்தில் பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற வாய்ப்பில்லை என்று பணிப்பாளர் தெரிவித்ததாகவும் யுவதியின் தாயார் கூறியுள்ளார்.
எனினும் மருத்துவமனையின் முன் கடந்த இரண்டு நாட்களில் நடத்திய எதிர்ப்பு போராட்டத்தில் போது மருத்துவமனையில் பணிப்பாளர் வேறு ஒரு கதையைச் சொன்னதால், சம்பவம் குறித்து தனக்கு சந்தேகம் இருப்பதாக அவர் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
விசாரனையை தீவிரப்படுத்த கோரிக்கை
சம்பவம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினரும் நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான மஞ்சுள சுரவீர ஆராச்சி டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்து, விசாரணைகளை தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று (06.03.2026) அவர் வைத்தியசாலைக்கு விஜயம் செய்தபோது, மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர், நுவரெலியா மாவட்ட பிரதி சுகாதார பணிப்பாளர், ஹட்டன் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் நிஸ்ஸங்க கொடமுன்ன மற்றும் மருத்துவமனை நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்டோருடன் மருத்துவமனை வளாகத்தில் சிறப்பு கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார்.

இந்த கலந்துரையாடலுக்குப் பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மஞ்சுள சுரவீர ஆராச்சி, குறித்த பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு தொடர்பில் மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் மற்றும் ஹட்டன் பொலிஸார் தனித்தனியாக இரண்டு விசாரணைகளை தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கேமரா (CCTV) காட்சிகளும் சரிபார்க்கப்பட்டதாக அவர் கூறினார்.
அந்த காட்சிகளின் அடிப்படையில், மூன்று மருத்துவமனை ஊழியர்கள் நான்கு சந்தர்ப்பங்களில் பிணவறைக்குள் சென்று, குறுகிய நேரத்திற்குள் வெளியே வந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தீவிரப்படுத்தப்படும் விசாரணை
மேலும், சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நாளில் பிணவறை முறையாக பூட்டப்படாமல் இருந்ததுடன், சாவியும் பாதுகாப்பாக வைக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அதேபோன்று, பிரேத பரிசோதனை நடைபெறும் வரை உடல்களை பாதுகாப்பாக சேமித்து வைக்கும் வசதிகள் மருத்துவமனையில் இருந்தபோதிலும், குறித்த யுவதியின் உடல் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்படாமல் இருந்தது சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மூன்று மருத்துவமனை ஊழியர்களும் எந்தவொரு காரணத்திற்காக பிணவறைக்குச் சென்றனர் என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அந்த மூன்று ஊழியர்களும் தற்காலிகமாக வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் பாரபட்சமற்ற மற்றும் நியாயமான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் மஞ்சுள சுரவீர ஆராச்சி தெரிவித்துள்ளார்.


ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 18 மணி நேரம் முன்
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri