ஐக்கிய நாடுகளின் அமைதிப்படையில் இலங்கை படையினர் குறித்து எழுந்துள்ள சர்ச்சை
ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிகளுக்கு பங்களாதேஷ் மற்றும், இலங்கையை சேர்ந்த சித்திரவதை மற்றும் சட்டத்திற்கு புறம்பான கொலைகளில் ஈடுபட்ட அதிகாரிகளை அனுப்பியதாக குற்றஞ்சாட்டும் ஆவணப்படம் ஒன்று கடந்த வாரம் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து,ஐக்கிய நாடுகள் சபை, அமைதி காக்கும் படையினருக்கான அதன் திரையிடல் செயல்முறையை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மன் ஒலிபரப்பாளர் DW, ஸ்வீடனை தளமாகக் கொண்ட புலனாய்வு நிறுவனமான Netra News மற்றும் ஜேர்மன் செய்தித்தாள் Süddeutsche Zeitung ஆகியவற்றின் கூட்டு விசாரணையின்படி, பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பான கடுமையான குற்றச்சாட்டுகளுடன் கூடிய அதிகாரிகளை அமைதி காக்கும் படையினராக அனுப்புவது தொடர்பில், “ஐக்கிய நாடுகள் சபை, கண்ணை மூடிக்கொண்டு இருப்பதாக” குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆவணப்படம் பற்றிய கேள்வி
இந்த நிலையில் வழமையான ஊடக சந்திப்பில் ஆவணப்படம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது, ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் குற்றச்சாட்டுகளை அறிந்திருப்பதாகவும், ஆவணப்படத்தை அவர்கள் பார்த்ததாகவும் கூறியுள்ளார்.
அமைதி காக்கும் திணைக்களத்தில் உள்ள தமது சகாக்களும் ஆவணப்படத்தின் தயாரிப்பாளர்களிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
மனித உரிமைகளுக்கான மரியாதை மற்றும் அர்ப்பணிப்பு உட்பட, செயல்திறன் மற்றும் ஒருமைப்பாட்டின் மிக உயர்ந்த தரத்தை பூர்த்தி செய்யும் பணியாளர்களை பணியமர்த்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபை உறுதிபூண்டுள்ளது,
இதற்காக, பணியாளர்களின் மனித உரிமைகள் திரையிடல் கொள்கையின் கீழ் தொடர்புடைய நடைமுறைகள் மற்றும் வழிமுறைகளை நிறுவியுள்ளது என்றும் டுஜாரிக் வலியுறுத்தியுள்ளார்.
திரையிடலில் மூன்று பகுதிகள்
அமைதி காக்கும் படையினரின் திரையிடலில் மூன்று பகுதிகள் உள்ளன என்றும் பேச்சாளர் விளக்கினார்.
ஒன்று சுய சான்றிதழை உள்ளடக்கியது. இரண்டாவது அனுப்பும் நாட்டின் சான்றிதழை உள்ளடக்கியது.அத்துடன் இதில் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் நடைமுறையும் உள்ளது, என்று அவர் கூறியுள்ளார்.
எனினும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், குறித்த நாடுகளின் சீருடை அணிந்த பணியாளர்கள் பணியமர்த்தப்படாமல் போகலாம் அல்லது ஐக்கிய நாடுகள் சபையால் திருப்பி அனுப்பப்படலாம் என்று பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை தாக்கும் ஈரான்? பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள் News Lankasri
