மட்டக்களப்பில் கோவிட் தொற்றை கட்டுப்படுத்த விழிப்புணர்வு நடவடிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தினை மீண்டும் அச்சுறுத்த ஆரம்பித்துள்ள கோவிட்- 19 வைரசின் மூன்றாவது அலையினை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறுபட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள் மாவட்டம் பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மாவட்ட மக்களைப் பாதுகாத்து, கோவிட்-19 தொற்றுப் பரவலை மாவட்டத்திற்குள் கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்ட கோவிட் -19 தடுப்புச் செயலணியால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைவாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கோவிட் -19 தொற்றிலிருந்து தம்மைத் தாமே பாதுகாத்துக்கொள்ளக் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பிலும், கோவிட் தடுப்பு மருந்து ஏற்றுவதன் ஊடாக நாம் அடையும் நன்மை தொடர்பாகவும், விழிப்புணர்வூட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதன் ஒரு அங்கமாக சர்வோதய தொண்டு நிறுவனத்தின் சுவோதய நடமாடும் பிரிவின் ஊடாக முன்னெடுக்கப்படும் நடமாடும் டிஜிட்டல் வாகனத்தின் கோவிட்- 19 விழிப்புணர்வு செயற்பாடுகள் நேற்று ஓட்டமாவடி, வாழைச்சேனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தமது சேவைகளை முன்னெடுத்தது.
இதன் போது மட்டக்களப்பு சர்வோதயத்தின் வெளிக்கள பணிப்பாளர் ஈ.எல்.ஏ.கரீம், ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர் உள்ளிட்ட சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
மாவட்டம் பூராகவும் 5 நாட் செயற்பாடாகக் குறித்த விழிப்புணர்வு செயற்பாடானது காணொளி, விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டும் செயற்பாடுகள் ஊடாக மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளது.
சர்வோதயத்தின் தலைவர் சமூக நல விசேட வைத்திய நிபுணர் வின்னயா ஆரியரத்ன அவர்களது
ஆலோசனை மற்றும் வழிகாட்டவில் இவ்வாறான விழிப்புணர்வு செயற்பாடுகள்
இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.