தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்களுக்கு தொடர் அச்சுறுத்தல்
கிழக்கில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்களுக்கு தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுவருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்று(6) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர் அச்சுறுத்தல்
"தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வாகரை அமைப்பாளர் காளிராசா சதீஸின் வீட்டிற்கு நேற்று காலை 6 மணிக்கும் பின்னர் காலை 11 மணிக்கும் இரு தடவைகளில் முறையே புலனாய்வு பிரிவினரும் பொலிஸாரும் சென்று கடுந்தொனியில் விசாரணை செய்துள்ளனர்.
இன்று கரும்புலிகள் நாள் அதன் நினைவாக மாவீரர் பெற்றோருக்கு உலர் உணவு கொடுப்பதற்காக தருமலிங்கம் சுரேஷ் கதிரவெளிக்கு வர இருப்பதாகவும் நினைவேந்தல் செய்யவிருப்பதாகவும் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக அச்சுறுத்தியுள்ளனர்.
இதனை தமிழ் தேசிய முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது. அண்மைக்காலமாக எமது உறுப்பினர்களும் செயற்பாட்டாளர்களும் நேரடியாகவும் தொலைபேசியூடாகவும் அச்சுறுத்தப்படுகின்றார்கள்.
கடந்த 4 ஆம் திகதி அன்று எமது வவுனதீவு செயற்பாட்டாளர் பிரதீபன் அவர்களும் புலானாய்வுப்பிரிவினரால் அச்சுறுத்தப்பட்டார்.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக எந்தவிதமான விட்டுக்கொடுப்பும் இல்லாமல் குரலெழுப்பும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பின்னால் மக்கள் அணிதிரண்டுள்ள நிலையில் அதனை சிதைப்பதற்காக இவ்வாறான அச்சுறுத்தல்களை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
வழமைபோன்று இம்முறையும் யூலை 5 இல் குண்டு வெடிக்கும், தாக்குதல் நடக்கும் என்ற கதையை கட்டியுள்ளனர். தங்களுடைய நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக இவ்வாறான பொய்களை கூறிவருவது வரலாறாகும்.
முன்னாள் விடுதலை புலிகளின் பெற்றோர் உறவினர்கள் இந்த மண்ணில்தான் வாழ்கின்றனர்.
நாம் பொறுப்புள்ள ஒரு மக்கள் இயக்கம் என்ற அடிப்படையில் அவர்களின் வாழ்வாதாரம் பற்றியும் அவர்களின் அடிப்படை பிரச்சினை தொடர்பாகவும் கவனம் எடுத்து வருகின்றோம்.
மக்களின் இன்னல்கள்
இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் வடக்கு, கிழக்கிலுள்ள மக்கள் பல இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
அனர்த்தங்கள் வருகின்றபோது புலம்பெயர் தேசத்திலுள்ள மக்களுக்கு உதவுவது வழமை.
அவ்வாறு கிடைக்கின்ற சிறியளவிலான உதவிகளை கொடுக்காமல் தடுப்பதன் நோக்கம் என்ன? மேலும் மக்களை பட்டினியால் சாகடிக்கவா? “என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.