வவுனியாவில் தடை அறிவுறுத்தல்களை மீறி தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கும் பணிகள் தீவிரம்
வவுனியா - உக்குளாங்குளம் பகுதியில் மக்கள் குடியிருப்புப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தனியார் தொலைத் தொடர்புக் கோபுரம் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு அச்சுறுத்தலாகவும் பாதுகாப்பற்றதாகவும் காணப்படுவதாகத் தெரிவித்து அங்கு அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பினைத் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து நகரசபையினால் தொலைத் தொடர்புக் கோபுரம் அமைக்கும் பணிக்குத் தடை அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.
கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் அங்கு தொலைத் தொடர்புக் கோபுரம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்நடவடிக்கையினைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அப்பகுதி மக்கள் கோரியிருந்தனர் .
இந்நிலையில் அங்கு தொலைத் தொடர்புக் கோபுரம் அமைப்பதற்கு நகரசபைத் தவிசாளர் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்த நிலையில், தற்போதும் தொலைத் தொடர்புக் கோபுரம் அமைக்கும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாகவும், நகரசபையினால் இந்நடவடிக்கை தடுத்து நிறுத்தப்படவில்லை என்று மக்கள் தெரிவிக்கின்றனர் .
இவ்விடயம் குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், எமது பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தொலைத் தொடர்பு கோபுரம் பாதுகாப்பு அற்றதுடன் அச்சுறுத்தலாகவும் காணப்படுவதாக நகரசபையினருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் அந்நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக எமக்குத் தெரிவிக்கப்பட்டபோதிலும் இன்றுவரை தொலைத் தொடர்பு கோபுரம் அமைக்கும் பணிகள் மிகத் தீவிரமாக இடம் பெற்று வருகின்றது .
இவ்வாறு இரவு பகலாக அமைக்கப்பட்டு வரும் பணிகளைத் தடுத்து நிறுத்தாமல் கோபுரம் அமைக்கப்பட்டு விட்டது. இனி ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று தெரிவிப்பதற்காகவே இப்பணிகள் அவசரமாக இடம்பெற்று வருகின்றது.
மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொள்வதற்கு முயன்ற போதிலும் கோவிட்-19 தொற்றைக் காரணம் காட்டி பொலிஸாரின் தலையீட்டால் மக்களின் ஆர்ப்பாட்டமும் தடுக்கப்பட்டுள்ளது.
இதன் பணிகளை மேற்கொள்வதற்கு பண்டாரிக்குளம் கிராம அபிவிருத்திச் சங்கம் சம்மதக்கடிதம் ஒன்றினை வழங்கியுள்ளதாகவும், உங்குளாங்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்குளாங்குளம் கிராமத்திற்குள் பண்டாரிக்குளம் கிராம அபிவிருத்திச்சங்கம் எவ்வாறு சம்மதம் தெரிவிக்க முடியும். இவ்வாறு இதனை அமைப்பதற்கு பல்வேறு முன்னுக்குப்பின் முரண்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது .
மக்கள் குடியிருப்புப் பகுதியினுள் இக்கோபுரம் அமைப்பதைத் தடை செய்யுமாறு கோருவதாகவும், இதற்குரிய உடனடி நடவடிக்கையை இங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்ளவேண்டும் என்று மேலும் தெரிவித்துள்ளனர்.



பெண்களுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ... புகாரளித்த அதிகாரியை மிரட்டிய லண்டன் பொலிசார் News Lankasri
உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த வரி விதிப்பு ரத்து: அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு News Lankasri