ஹம்பாந்தோட்டை லொஜிஸ்டிக் சர்வதேச சேவை வழங்கல் நிலையத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பம்
“மாகம் ருஹுணுபுர மகிந்த ராஜபக்ச துறைமுக” வளாகத்தின் முதலாவது களஞ்சிய வளாகமான ஹம்பாந்தோட்டை லொஜிஸ்டிக் சர்வதேச சேவை வழங்கல் நிலையத்தின் நிர்மாணப் பணிகள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் தலைமையில் இன்று (14) ஆரம்பிக்கப்பட்டது.
ஒரு ஹெக்டேயர் பரப்பளவைக் கொண்ட இக்களஞ்சிய வளாகத்தின் நிர்மாணப் பணிகளைக் குறிக்கும் வகையில் பிரதமரினால் நினைவு பலகை திறந்து வைக்கப்பட்டது.
ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஜோன்சன் லியூவின் அழைப்பின் பேரில் இந்நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் மகிந்த ராஜபக்ச இலங்கைக்கான சீன தூதுவர் குய் ஷென்ஹொங் உள்ளிட்ட குழுவினருடன் துறைமுக வளாகத்தில் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.
ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக வளாகத்தில் உள்ள பல் கல சரக்கு பரிமாற்றல் நடவடிக்கை பிரிவிற்கு (Ro Ro operations) விஜயம் செய்த பிரதமர் அங்கு நடைபெறும் வாகன மீளேற்றல் செயற்பாட்டைக் கண்காணித்தார்.
இவ்வருடத்தில் மாத்திரம் சுமார் ஐந்து இலட்சம் வாகனங்கள் அப்பிரிவினால் கையாளப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஜோன்சன் லியூ பிரதமரிடம் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவின் சென்னை, முந்த்ரா, எனோர், தென்கொரியாவின் குன்சான், பியொங்டெக் மற்றும் ஜப்பானின் ஒசாகா, கொபே மற்றும் நகோயா ஆகிய துறைமுகங்களிலிருந்து பரிமாற்றல் நடவடிக்கைக்காக ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வாகனங்கள் கொண்டு வரப்பட்டது.
அத்துடன் தென்னாபிரிக்காவின் டர்பன், மெக்சிகோவின் வெரக்ரஸ், அமெரிக்காவின் சென் அன்டோனியோ, நெதர்லாந்தின் ரொடர்டேம் மற்றும் பிரான்சின் லே ஹெவரே ஆகிய துறைமுகங்களுக்கு இவ்வாகனங்கள் மீளேற்றப்பட்டன.
துறைமுக வளாகத்தில் உள்ள கைத்தொழில் வலயத்தில் நிர்மாணிக்கப்படும் ஷென்ஷென் ஷின்ஜி குழுமத்திற்கு (Shenzhen Xinji Group) சொந்தமான “பிரினிமி” (Plug and Play) “மண்டலத்தினுள் மண்டலம்” (Park in Park) எனும் எண்ணக்கருவில் செயற்படுத்தப்படும் மின்னணு சாதன உற்பத்தி வலயம் மற்றும் சிலோன் டயர் உற்பத்தி தனியார் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்படும் டயர் உற்பத்தி தொழிற்சாலை வளாகம் பிரதமரின் விசேட கவனத்திற்கு உட்படுத்தப்பட்டது.
டயர் உற்பத்தி தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைக்கான மூலப்பொருட்களும், மனித வளமும் உள்நாட்டிலிருந்தே பெறப்படுகின்றன. 55.8 ஹெக்டேயர் பரப்பளவிலான டயர் உற்பத்தி தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகளுக்காக இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்படும் முதலீடு 600 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பிலும், எதிர்கால அபிவிருத்தி வேலைத்திட்டம் குறித்தும் இதன்போது ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஜோன்சன் லியூவினால் பிரதமருக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.
ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமத்தினால் லுணுகம்வெஹெர கிராமத்தினை “எதிர்பார்ப்பின் கிராமமாக” அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டத்தின் அரச பத்திரம் அமைச்சர் சமல் ராஜபக்ச மற்றும் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஜோன்சன் லியூ ஆகியோரிடையே பரிமாற்றிக் கொள்ளும் செயற்பாடும் இதன்போது இடம்பெற்றது.
குறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சர்களான சமல் ராஜபக்ச, G.L.பீரிஸ், நாமல்
ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ச, தென் மாகாண சபையின்
தவிசாளர் சோமவங்ஷ கோதாகொட, துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சின்
செயலாளர் U.D.C.ஜயலால், துறைமுக அதிகாரசபையின் தலைவர் நிஹால் கெப்படிபொல,
களம்பு லொஜிஸ்டிக் குழுமத்தின் தலைவர் எரிக் அம்பலங்கொடகே உள்ளிட்ட அரச
அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri

முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri
