கல்முனை வைத்தியசாலை சீருடை விவகாரம் : எழுந்துள்ள விசனம்
அரசியலமைப்பு உரிமைகளை சுற்றறிக்கைகளைக் காட்டி மறுக்க முடியாது என மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சட்டத்தரணி மு. அஸ்ஸம் தெரிவித்துள்ளார்.
கல்முனை - வடக்கு ஆதார வைத்தியசாலை சீருடை விவகாரம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைகளை அடுத்தே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அடிப்படை உரிமைகளை பாதுகாத்தல்
பாதிக்கப்பட்ட பணியாளர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி எம்.எம்.எம்.மு.அஸ்ஸம், "குறித்த ஆடை அனுமதிக்கப்படாத ஒன்றாக இருந்தால், அதே ஆடையுடன் அவர்கள் வேறு அரச வைத்தியசாலையில் எவ்வாறு பணியாற்ற முடியும்? அவ்வாறாயின் அரசியலமைப்பை நடைமுறைப்படுத்த முடியாத தனி மண்டலமாகவா கல்முனை ஆதார வைத்தியசாலை தொழிற்படுகிறது? எனக்கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், அரச தாபன விதிக்கோவை மற்றும் சுற்றறிக்கைகளை மட்டும் மேற்கோள்காட்டி அதிகாரிகள் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து விலகிவிட முடியாது என்றும், தாதியர் உள்ளிட்ட ஏனைய பணியாளர்களுக்கும் இந்தப் பிரச்சினை விரிவடையும் முன் சுகாதார அமைச்சு தேசிய மட்டத்திலான நிரந்தர கொள்கைத் தீர்வை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், இந்தச் சம்பவத்தை சாதகமாக பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் இனவாதக் கருத்துக்களையும் போலிப் பிரசாரங்களையும் பரப்புவதை தவிர்த்து பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.