தனியொரு நபருக்காக அரசியல் சாசனம் திருத்தப்பட்டுள்ளது – ஜே.வி.பி.
தனியொரு நபருக்காக அரசியல் சாசனம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது என ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசியல் சாசனம் தனியொரு நபருக்காக திருத்தி அமைக்கப்படுவது எந்தளவிற்கு மக்கள் சார்பான தீர்மானம் என்பதனை சிந்தித்து பார்க்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய போது இன்று அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்றம் பிரவேசிக்கும் வகையில் அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த திருத்தம் செய்யப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சட்டம் குறித்து ஆளும் கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பிய போது இது 2021ம் ஆண்டு அறிமுகம் செய்யப்படும் புதிய அரசியல் சாசனத்தில் இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்ற உறுப்பினரான தெரிவாவதனை ரத்து செய்யும் வகையில் சரத்துக்கள் உள்ளடகக்ப்படும் தற்போதைக்கு இதற்கு ஆதரவு வழங்குமாறு கோரப்பட்டிருந்தது, எனினும் இது உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு தனியொரு நபருக்காக அரசாங்கம் சட்ட திருத்தங்களை மேற்கொள்வது முற்போக்கானதா அல்லது சுயநலமானதா என்பதனை மக்கள் தீர்மானிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்சவிற்கு இரட்டைக் குடியுரிமை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.